web log free
February 05, 2026

எரிபொருள் விலையை மேலும் 100 ரூபாவால் குறைக்க முடியும்

எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்தும் உண்மையான விலைகளின்படி ஒரு லீற்றர் எரிபொருளின் உள்நாட்டு விலையை குறைந்தபட்சம் 100 ரூபாவினால் குறைக்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் ஒழுங்குமுறை முறையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய உலக சந்தை விலையின்படி இலங்கையில் எரிபொருள் விலையை 20 மற்றும் 10 ரூபாவால் குறைத்தமை போதாது, நியாயமான செலவின் அடிப்படையில் எவரும் அறியக்கூடிய எளிமையான முறையில் எரிபொருள் விலை தீர்மானிக்கப்பட வேண்டும் என தலைவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முறையான எரிபொருள் விலை சூத்திரம் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபை மின்சார உற்பத்திக்கு தேவையற்ற செலவுகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால், வெளிப்படையான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலக சந்தையில் நிலவும் உண்மையான விலைக்கு ஏற்ப இலங்கையில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை மேலும் குறைய வேண்டும் என ஜனக ரத்நாயக்க கூறியதுடன், உண்மையான எரிபொருள் விலை தொடர்பில் முன்னர் முன்வைக்கப்பட்ட தரவுகள் சரியானவை என நிதி அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd