web log free
March 29, 2024

போராட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு சிக்கல்

மருத்துவ வதிவிட விசா என்ற பிரிவின் கீழ் இலங்கைக்கு வந்து காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக இணையத்தில் பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்ட பிரித்தானிய பிரஜையான பெண் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

kayzfra5er என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ஃபேஸ்புக் கணக்கு மூலம் அவர் போராட்ட பதிவு உள்ளிட்ட வீடியோக்களை பரப்பியது தற்போது தெரியவந்துள்ளது.

போராளிகளின் தலைக்கு பாதுகாப்பு தரப்பினர் கைத்துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதாகவும் அவர்கள் அழுதுகொண்டே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இவ்வாறான நடவடிக்கை நாட்டிற்கு தேவையில்லை என்றும் நாட்டை மாற்ற ஒன்றிணையுங்கள் என்றும் மேற்குலக நாடுகளுக்கு கூறி இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிகிச்சையாளராக மருத்துவ வதிவிட விசா பிரிவின் கீழ் 2019 ஆகஸ்ட் 14 முதல் பிரித்தானிய விசாவை நீடிப்பதன் மூலம் நீர்கொழும்பு மற்றும் மாலபே ஆகிய இடங்களில் அவர் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

விசா நிபந்தனைகளை மீறும் வகையில் செயற்பட்டமைக்காக அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் விசாவை மேலும் நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சரத் ரூபசிறி தெரிவித்துள்ளார்.