web log free
October 25, 2025

இப்போதைக்கு மாகாண சபைத் தேர்தல் கிடையாது, ஆளுநர்களுக்கு அதிகாரங்கள் பகிர்வு

மாகாண சபைகளின் நிதி நிர்வாகப் பொறுப்புக்கள் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பில் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இன்றைய சவாலான காலங்களில், பொதுச் செலவினங்களை நிர்வகிப்பதும், பொதுச் சேவைகளை உகந்த அளவில் பராமரிப்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

மாகாண சபை நிர்வாகம், அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் மாகாண சபை செலவுகளை நிர்வகிப்பதுடன் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தேசிய கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு அமைவாக செயற்படுவது மிகவும் முக்கியமானதாகும்.

ஆளுநர்கள் தமது மாகாணத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகளை இனங்கண்டு அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தும் போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஜனாதிபதியின் அலுவலகத்துடனும் நல்ல ஒருங்கிணைப்பை பேண வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது தமது மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி மாகாண சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் வழமையான கலந்துரையாடலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டான காலப்பகுதியில் தேசிய இலக்குகளை அடைவதற்கு ஆளுநர்களின் பங்களிப்பு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தி வருவதாக ஜனாதிபதியின் செயலாளரின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd