web log free
February 05, 2026

பதவிகளை ஏற்காது அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவோம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மாவட்ட அபிவிருத்தித் குழு தலைவர் பதவிகளை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு, கிழக்கில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களாக நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 

அது தொடர்பிலே பல்வேறுபட்ட கருத்துக்கள் நியாயங்கள் எங்களிடம் கேட்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ் மக்கள் தங்களுடைய அன்றாட பிரச்சினைகளாக பல விடயங்களை சந்தித்து கொண்டிருக்கின்றர்கள், அது தொடரபில் நாங்கள் டலஸ் அழகபெருமவிடமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கூறி இருக்கின்றோம்.

அரசியல் கைதிகளுடைய விடுதலையில் முதற் கட்டமாக ஒரு சிறு தொகையினரையாவது விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் காணி விடுவிப்பிலும் கூடிய கவனம் செலுத்தியாக வேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறான எமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றினால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது நம்பிக்கை ஏற்பட்டால், அடுத்த கட்டம் என்ன என்பது குறித்து பரிசீலிக்க முடியும். 

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அதிகாரம் என்ன? ஏன் இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் இருக்க வேண்டும் ? இது ஒரு கண்துடைப்பாகும் என்று தெரிவித்த அவர், மக்களை ஏமாற்றுவதற்காக அரசாங்கத்தினால் கொடுக்கப்படுகின்ற பதவிகளாகும் என்றார்.  

இலங்கையினுடைய பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்பது அல்லது பொருளாதார நடவடிக்கைகளை கட்டி அமைப்பதிலே எங்களுடைய பங்கு இருக்கும். பொருளாதார பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு, மலையகத்தில் வாழ்கின்ற மக்களை மிகவும் பாதித்திருக்கின்றது.

எனவே, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பாக அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் என்றார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd