web log free
September 29, 2023

வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல்

மருந்துப் பற்றாக்குறைக்கு மேலதிகமாக சில வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி உணவைப் பெற்றுக் கொள்வது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சத்துணவு வழங்குவோருக்கு முறையான பணம் வழங்கப்படாததால், மருத்துவமனைகளுக்கு உணவு, பழங்கள், சூப், கஞ்சி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன் உள்ளிட்டவை மட்டுப்படுத்தப்பட்டதாக சங்கத்தின் தலைவர் எஸ்.பி.மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மிகப் பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் இந்தப் பிரச்சினை உள்ளதாகத் தெரிவித்த அவர், நோய்களைக் குணப்படுத்தும் வகையில் நோயாளர்களுக்கு சத்தான உணவுடன் மருந்துகளும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இந்த நிலையில் அதிகாரிகள் கவனம் செலுத்தி விநியோகஸ்தர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்கி நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.