web log free
September 18, 2025

அமைச்சர் மனுஷ விடுத்துள்ள எச்சரிக்கை!

போலந்து, ருமேனியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், மலேசியா, மாலைதீவு போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவிலான தனிநபர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை தேடிக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து மோசடி செய்பவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஒரு வெளிநாட்டு வேலையின் நோக்கத்திற்காக கடவுச்சீட்டு அல்லது தேவையான நிதியை வழங்குவதற்கு முன், சம்பந்தப்பட்ட அமைப்பு மற்றும் அதன் உரிமத்தின் சட்டபூர்வமான தன்மையை தீர்மானிக்க உறுதிப்படுத்தல்களைப் பெற வேண்டும் என கூறினார்.

மோசடி செய்பவர்களின் தகவல்களைப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd