அரசுத் துறையின் ஓய்வு பெறும் வயது வரம்பை திருத்துவது தொடர்பாக பல்வேறு தரப்புகளிடமிருந்து கிடைத்துள்ள கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியதாவது:
“ஏற்கனவே பல்வேறு தொழில்முறை குழுக்களிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்துள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையின் சில தொழில்முறை பிரிவுகளிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களத்திலிருந்தும் கோரிக்கைகள் கிடைத்துள்ளன.
மேலும் சில தொழில்முறை குழுக்கள், தங்களின் ஓய்வு வயதை உயர்த்தி, இன்னும் சில ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளன. சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். இருப்பினும், அரசாகிய நாம் அந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறோம்.”
மீரிகம வைத்தியசாலையில் சிறுநீரகக் கற்களை அகற்றும் புதிய சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.




