-உச்சக்கட்ட பரபரப்பில் தெற்கு!
தேவேந்திரமுனை (தெவிநுவர) ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹராவில் காவடி ஆட்டக் குழுக்கள் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக காவடி ஆட்டத்தை நீக்குமாறு பொலிஸார் முதலில் பரிந்துரைத்திருந்த போதிலும், தற்போது அந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டு அனைத்து காவடி குழுக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், குறிப்பிட்ட சில குழுக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கும் தீர்மானத்தினால், அதனுடன் தொடர்புடைய சில பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே உரசல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டன.
பஸ்நாயக்க நிலமேக்கு, கஞ்சிபானி இம்ரான் மரண அச்சுறுத்தல் விடுத்தமையை அடுத்து இவ்விவகாரம் நாட்டின் முழுக் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இம்ரானின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து தெவுந்தர பகுதியைச் சேர்ந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடையவராகவும் போதைப்பொருள் கடத்தல்காரராகவும் கூறப்படும் தெஹிகெதர பாலே மல்லி ஆயுதங்களுடன் இருக்கும் படத்தையும், ஓடியோ ஒன்றையும் வெளியிட்டுருந்தார்.
தமது மத நம்பிக்கைகள் தொடர்பில் தலையிட வேண்டாம் என கஞ்சிபானி இம்ரானுக்கு பாலே மல்லி வெளியிட்டுள்ள ஓடியோ ஒன்றும் வெளியாகியிருந்தது. தெற்கோடு மோத வேண்டாம் என்றும், அதனை கொழும்பில் வைத்துக் கொள்ளும்படியும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கஞ்சிபானி, பாலே மல்லிக்கு பதிலடி கொடுக்கும்படி ஓடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். கடும் எச்சரிக்கையுடன் கூடிய அதில் பாலே மல்லிக்கு அவரது தந்தையைக் கொன்றவரைக் கொல்வதற்கு 20 வருடங்கள் என்றதாகவும் கஞ்சிபானி கூறியிருந்தார்.
இந்நிலையில், கஞ்சிபானிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலே மல்லி ஓடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கஞ்சிபானி இம்ரானை வெறும் பேஸ்புக் வீரனென்றும், தான் தனது அப்பாவை கொன்றவர்களை 20 வருடங்கள் கழித்தாவது பலிவாங்கிய போதிலும், உன்னால் உன் தந்தையை வெட்டியவரை இன்னும் எதுவும் செய்ய முடியவில்லை என பாலே மல்லி தெரிவித்துள்ளார். முடியுமென்றால் தன்னை தொடும்படியும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில், கஞ்சிபானியின் கூட்டாளி எனக் கூறப்படும் ஷான் பிரமித்தின் மாமாவின் வீட்டை இலக்காகக் கொண்டு, தெஹிகெதர பாலே மல்லியின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் சிலரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவங்களை அடுத்து, புலனாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டியும், நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டும், காவடி நடனத்தை மாத்திரம் பெரஹராவிலிருந்து நீக்குமாறு பொலிஸ் மா அதிபர் பரிந்துரை செய்திருந்தார்.
ஆனால், தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திங்கட்கிழமை (27) காலை அனைத்து காவடி குழுக்களுக்கும் பெரஹராவில் கலந்துகொள்ளும் அனுமதியை வழங்குவதற்கு திடீர் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த பரஸ்பர முரண்பாட்டை அடுத்து, இன்று மாத்தறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன, ஏனைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். இதில் மேற்கொண்ட தீர்மானத்தின் படி அனைத்து காவடி குழுக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக, ஊர்வலத்தின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF) பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.




