– சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு
தேர்தல் காலத்தில் 12 இலட்சம் ரூபாய்க்கு ‘Witz’ ரக மோட்டார் வாகனங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது வாகன இறக்குமதிக்கு 50% மேலதிக வரியை விதித்து, நுகர்வோர் உரிமைகளை முற்றாக அழித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் உள்ளிட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தற்போது கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலின்போது ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ ஒன்றை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக,
- மின்சாரக் கட்டணத்தை 33% குறைத்தல்
- துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கே எரிபொருளை வழங்குதல்
- இளைஞர்களுக்கு சலுகை விலையில் வாகனங்களை வழங்குதல்
போன்ற முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.




