கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரே அரசியல் அணியிலிருந்து இரு வேட்பாளர்கள் போட்டியிட்டதே தோல்விக்கான பிரதான காரணமாக அமைந்ததாகவும், மீண்டும் அந்தத் தவறை செய்யாமல் எதிர்வரும் தேர்தல்களை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சி உறுப்பினர்களினதும் ஒருமித்த கோரிக்கையாக எதிர்காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனவும், அதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் ஆசீர்வாதமும் ஆதரவும் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாமல் ராஜபக்ஷ தன்னால் முடிந்தளவு முயற்சி செய்து குறைந்தபட்சம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் அது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாவது:
“தெளிவாகவே எமது அரசியல் அணிதான் இந்த அணி. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த அணியிலிருந்து இரு வேட்பாளர்கள் போட்டியிட்டதே எமது தோல்விக்கான பிரதான காரணமாக அமைந்தது. இரவு விழுந்த குழியில் மீண்டும் பகலில் விழக்கூடாது. எனவே, எதிர்காலத்தில் இந்தத் தேர்தல்களை எதிர்கொள்ளும்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும், ஒன்றாக இணைய வேண்டும் என்பதே அனைத்து கட்சி உறுப்பினர்களினதும் ஒருமித்த கோரிக்கையாகும்.
அதற்காக எதிர்காலத்தில் அனைவரும் செயற்பட எதிர்பார்க்கின்றோம். தெளிவாகவே இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக வரப்போவது வேறு யாருமல்ல, சஜித் பிரேமதாச அவர்களே. அதில் எந்தவித விவாதமும் இல்லை. ரணில் விக்கிரமசிங்க அவர்களும் அதற்கு ஆசீர்வாதமும் ஆதரவும் வழங்குவார்.
நாமல் ராஜபக்ஷ அவர்களும் முடிந்தளவு முயற்சி செய்து குறைந்தபட்சம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும்.”




