22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு, அவருக்கு அரசியல் அதிகாரம் இல்லாதது காரணமாக இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹரிணி அமரசூரியவை தாம் நன்கு அறிந்திருப்பதாகவும், அவர் மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் குறிப்பிட்ட லால் விஜேநாயக்க, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவில் தன்னுடன் இணைந்து அவர் பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றியதாகவும், ஆனால் அவர் முன்னதாக அரசியலில் ஈடுபட்ட ஒருவராக இல்லாததால், அவருக்குப் பின்னால் அரசியல் அதிகாரம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியலில் ஈடுபடும் ஒருவர் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு அரசியல் பலம் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள லால் விஜேநாயக்க, 22ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் இதுவரை தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கு, தனக்கு அரசியல் ஆதரவு இருப்பதாக நம்பிக்கை இருப்பதே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு அவ்வாறான அரசியல் பலம் இல்லாததன் காரணமாகவோ அல்லது இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என அவர் தீர்மானித்திருப்பதன் காரணமாகவோ அவர் மௌனமாக இருக்கக்கூடும் என லால் விஜேநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.




