தேவிநுவரை உப்புல்வன் ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் 769ஆவது ஆண்டு ஆடிப்பூர (எசல) மகா பெரஹெராவில், இந்த ஆண்டு காவடி நடன நிகழ்ச்சி நீக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மாத்தறை மாவட்ட செயலாளருக்கு வழங்கிய எழுத்துமூல பரிந்துரையின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த பரிந்துரையைத் தொடர்ந்து, மாத்தறை மாவட்ட செயலாளர் வந்தனா திலகரத்ன, தேவிநுவரை பஸ்நாயக்க நிலமேவிற்கு கடிதம் அனுப்பி, இம்முறை பெரஹெராவில் இருந்து காவடி நடன நிகழ்ச்சியை நீக்குமாறு அறிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வுப் பிரிவு, அரச புலனாய்வுச் சேவை, பொலிஸ் விசேட பணியகம் மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வழங்கிய புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைகளின்படி, காவடி குழுக்களைத் தேர்வு செய்வது தொடர்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன், சில தரப்பினரிடமிருந்து கடுமையான அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜூலை 28 அன்று நடைபெறவுள்ள மகா பெரஹெராவைக் காண பெருமளவிலான மக்கள் திரளவுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு அபாயத்தையும் தவிர்ப்பதே இந்த முடிவின் நோக்கமாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



