2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க
தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின் மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக்கொள்ள தயாராகி வருவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2028ஆம் ஆண்டு முதல் இலங்கை தனது வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்க வேண்டியுள்ளதால், அதற்கு முன்னதாக 2027ஆம் ஆண்டில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, தேர்தல்களை நடத்தாமல் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதே அரசாங்கத்தின் உள்நோக்கம் என ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்களை பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் அடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சுவரொட்டிகளை ஒட்டுதல் அல்லது வாழ்த்து அட்டைகளை அச்சிடுதல் போன்ற சிறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சியினரை குறிவைக்கும் அரசாங்கம், 323 கொள்கலன்கள் தொடர்பான சம்பவம் மற்றும் 90 நிலக்கரி கப்பல்கள் தொடர்பான பாரிய ஊழல் மோசடிகள் குறித்து எந்தவித விசாரணைகளையும் நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய எரிசக்தி நிலைமை தொடர்பாகவும் எச்சரிக்கை விடுத்த ரணவக்க, அரசாங்கம் முறையாக நிலக்கரியை இறக்குமதி செய்யத் தவறினால், எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதிக்குள் நாடு பாரிய மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.




