22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார வெளியிட்டுள்ள கருத்து, நாட்டின் நீதித்துறை அமைப்பின் சுயாதீனம் தொடர்பில் பாரதூரமான கேள்விகளை எழுப்புவதாக ‘தினன தகுண கூட்டு’ தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறான கருத்துகள் மூலம் உச்ச நீதிமன்றத்தின் பணிகளுக்கு அழுத்தம் ஏற்படுத்தப்படுவதாக வலியுறுத்தியுள்ளது.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி பல தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு “எந்த வகையிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாது” என தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்தை ‘தினன தகுண கூட்டு’ கடுமையாக கண்டித்துள்ளது.
குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிடவுள்ள நிலையில், பொறுப்பான அமைச்சரொருவர் இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து கருத்துகளை வெளியிடுவது சுயாதீன நீதித்துறை செயல்முறைக்கு ஏற்படுத்தப்படும் அழுத்தமாகும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னரும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இதேபோன்ற கருத்தொன்றை வெளியிட்டிருந்ததை நினைவுபடுத்தியுள்ள ‘தினன தகுண கூட்டு’, நீதித்துறை செயல்முறைக்கு அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.




