தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டு பட்டியல்கள் தயாரிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பட்டியலில் 94 பேரினதும், மற்றைய பட்டியலில் 126 பேரினதும் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
இந்தப் பட்டியல்களில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய தற்கொலை குண்டுதாரிகள் உள்ளிட்ட சஹ்ரான் ஹாஷிம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வழக்கின் சந்தேகநபர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த அறிக்கையைத் தயாரித்த அரச சேவையில் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ரஞ்சன் செனரத் பண்டாரவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையொன்றை விதிக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மேலும், 2009 ஏப்ரல் 3ஆம் திகதி சஹ்ரான் தொடர்பில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்த தகவல்கள் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் காத்தான்குடிக்குச் சென்ற அதிகாரி ஒருவர் சஹ்ரானின் சகோதரரான ஷைனி மௌலவியை சந்தித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஷைனி மௌலவியின் பெயரும் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என தயாரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த போதிலும், அவர் கைது செய்யப்படவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார்.
அந்த சந்தர்ப்பத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கவும் சஹ்ரானை கைது செய்யவும் வாய்ப்பு இருந்திருக்கலாம் எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் ஈஸ்டர் தாக்குதலுக்கான சதித்திட்டத்துடன் தொடர்புடையதா என்பது குறித்தும் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.




