தலைமறைவாகிவிட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை உயர் நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், அந்தச் செய்திகளை மறுத்த ஞானசார தேரர், தான் நாட்டை விட்டு ஓடவில்லை என்றும், சட்டத்தை மதித்து நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.




