web log free
May 20, 2025
kumar

kumar

இலங்கையின் உயர்கல்வி கட்டமைப்பில், நீண்டகாலமாக தலைமையை வகிக்கும் ICBT கம்பஸானது, அதனது சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பழைய மாணவர் கூட்டத்தை கொழும்பு கிங்க்ஸ்பெரி ஹோட்டலில் பெருமையுடன் நடாத்தியது. ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய சண்டர்லேன்ட் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக இரு தசாப்தங்களிற்கும் மேலாக சேவையாற்றும், ICBT கம்பசானது, இந்நன்கறியப்பட்ட ஐக்கிய இராச்சிய நிறுவகத்திலிருந்து தரமான உயர் கல்வியை பெற்றுக்கொண்ட பல்லாயிரக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கு அடித்தளமாக விளங்கியது.   

சமீபத்தில் நிறைவுபெற்ற பழைய மாணவர் சந்திப்பானது பட்டாதரிகளிற்கு மீளவும் தொடர்புரவும், அவர்களது பகிரப்பட்ட அனுபவங்களை கொண்டாடவும், மற்றும் வலுவான வலையமைப்பினை பேணவுமாக துடிப்பானதொரு மேடையயை அமைத்துத்தந்தது. இப்பழைய மாணவர்களில் பலர் இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலுமான நிறுவனங்களில் செல்வாக்குமிக்க பதவிகளை வகிப்பதானது, பன்முகப்பட்ட கற்கைநெறிகளுடனான ICBT - சன்டர்லேண்ட் பங்குடைமையின் வெற்றியை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. 

இம்மாபெரும் களியாட்டமானது 100 இற்கும் மேற்பட்ட ICBT –சன்டர்லேண்ட் பழைய மாணவர்களது பங்கேற்புடன் இடம்பெற்றிருந்ததுடன், இந்நிகழ்வானது ICBT கம்பசின் தவிசாளர், கலாநிதி. ஜகத் அல்விஸ், ICBT கம்பசின் நிறைவேற்றுப் பணிப்பாளர் / நிறைவேற்று நிர்வாக பீடாதிபதி/ பிரதம நிறைவேற்று அதிகாரி, கலாநிதி சம்பத் கன்னங்கர மற்றும் ICBT கம்பசின் சிரேஷ்ட முகாமைத்துவ குழுவின் ஏனைய உறுப்பினர்களினாலும், அதேவேளை சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் பிரதம நிதி அலுவலர் திரு. பென் டேல், சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அபிவிருத்தி தலைவர் ஜெமி சிம்ப்ஸன், சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தக ஆதரவு துறைத்தலைவர் திருமதி ஏஞ்சலா மேசன், சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் கற்கைகள் துணைத் தலைவர் (CPDனு மற்றும் சர்வதேச தாதியம்) திருமதி கரன் கில்ஸ், சண்டர்லேன்ட் பல்கலைக்கழகத்தின் தாதியத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி எலிசபெத் கிளார்க், சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் தெற்காசியாவிற்கான ஆட்சேர்ப்பு மற்றும் பங்குடைமை பணிப்பாளர், திருமதி பாவ்னா பக்கா, சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் பிரதி சர்வதேச ஆதரவு முகாமையாளர், திருமதி ஜுலி பெஸ்கோட் என சன்டர்லேண்ட் பல்கழைக்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களினாலும் பெருமைப்படுத்தப்பட்டிருந்தது.  

 “இப்பழைய மாணவர் சந்திப்பானது, இரு தசாப்தங்களிற்கும் மேலாக சன்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான முன்னணி பிரதிநிதியாக, பல வருடங்களாக எமது மாணவர்களிற்கு தரமானதும் சர்வதேச ரீதியிலானதுமான கல்வியை வழங்குவதிலான எமது வெற்றிகரமான முயற்சிகளிற்கு ஒரு சான்றாக விளங்குகின்றது. உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலுமாக முன்னணி அமைப்புக்களில் பரவியிருக்கும் ICBT – சன்டர்லேண்டின் மாணவர்களது எண்ணிக்கையானது இலங்கை மாணவர்களிற்கு சிறந்த உயர் கல்வியை வழங்குதல் எனும் ஒற்றை நோக்கத்திற்கான எமது தளராத அர்ப்பணிப்புக்களது பிரதியாக விளங்குகின்றது” எனக்குறித்துரைத்தார் ICBT கம்பசின் நிறைவேற்றுப் பணிப்பாளர்/ நிறைவேற்று நிர்வாக பீடாதிபதி/ பிரதம நிறைவேற்று அதிகாரி, கலாநிதி சம்பத் கன்னங்கர அவர்கள். 

கார்டியன் பல்கலைக்கழக வழிகாட்டி 2024 இல் சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ள, சன்டர்லேண்ட் பல்கலைக்கழகமானது, அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டிணைவுடன் உலகில் முன்னணி ஆய்வுகளை வழங்கி, கல்வி தரத்தினில் 125 வருட பாரம்பரிய பெருமையினை கொண்டுள்ளது. ICBT கம்பஸ் ஊடாக, பல்கலைக்கழகமானது வியாபார முகாமைத்துவம், தாதியப் பயிற்சி, இயந்திர பொறியியல், மின் மற்றும் மின்சாதன பொறியியல், தன்னியக்க பொறியியல் மற்றும் வலையமைப்பு முறைமை பொறியியல் முதலியன உள்ளடங்களாக, பல்வேறு பாடப்பரப்புக்களில் பலவிதமான மட்டங்களில் இளநிலை மற்றும் பட்டப்பின் கற்கைகள் என்பவற்றை வழங்குகின்றது.  

2000 ஆம் ஆண்டினில் தாபிக்கப்பட்ட, ICBT கம்பசானது 65,000 இற்கும் மேற்பட்ட உலகளாவிய பழைய மாணவர்கள் வலையமைப்புடன் இலங்கையின் அதிமுக்கியமான தனியார் உயர்கல்வி நிறுவனமாக விளங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பல்வேறு கம்பஸ்களின் ஊடாக 15,000 மாணவர்களை தற்போது கொண்டிருக்கும், ICBT ஆனது, ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியாவின் நன்கறியப்பட்ட பல சர்வதேச பல்கலைக்கழகங்களின் நம்பிக்கைமிகு பங்குதாரராக விளங்குகின்றது. சான்றிதழ் கற்கைநெறிகள், டிப்ளோமாக்கள், உயர் டிப்ளோமாக்கள், முற்-பல்கலைக்கழக அடிப்படை கற்கைநெறிகள், இளநிலை கற்கைநெறிகள், மற்றும் முதுநிலை கற்கைநெறிகள் என வழங்கப்படுகின்ற கற்கைநெறிகளானவை பன்முக பாடப்பரப்புக்களின் பல்வேறு மட்டங்களை பூர்த்திசெய்வதாகவுள்ளது.

 

 

சிறு பிள்ளைக்குக் கூட இருக்கும் நிர்வாகத் திறமையை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொண்டிருக்கவில்லை என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்தின் எதிரொலி எனும் நூல் வெளியீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மகிந்த ராஜபக்ச மக்களிடம் இருந்து அவ்வாறானதொரு பதிலைப் பெறவில்லை எனவும், அவருக்கு இன்னமும் மக்களின் மரியாதை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க தான் உட்பட மகா சங்கத்தினர் பெரும் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்ததாக ஆனந்த தேரர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கோட்டாபயவின் நிர்வாகத் திறமையின்மையால் ராஜபக்சக்களின் மரியாதை அழிக்கப்பட்டதாக கூறினார். 

இலங்கையில் சீனாவின் ராணுவ தளம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்ட தகவலை, இலங்கை பாதுகாப்புத் துறை இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னக்கோன் மறுத்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பரப்பில் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சித்து வரும் சீனா, ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக முதல்கட்டமாக 307 மில்லியன் அமெரிக்க டாலர், 2-வது கட்டமாக துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய 757 மில்லியன் டாலர்களை கடனாக வழங்கியது. பின்னர், கடன் சுமையைப் பயன்படுத்தி, ஹம்பந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றுக் கொண்டது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு, சீனாவிடம் வாங்கிய வரம்பற்ற கடனே காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இலங்கையில் ராணுவ தளம் அமைக்க சீனா திட்டமிட்டு வருவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இலங்கை பாதுகாப்புத் துறை இராஜாங்க அமைச்சர் பிரேமிதபண்டார தென்னக்கோன் கொழும்புவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “இலங்கை எல்லைக்குள் ராணுவ தளம் அமைப்பது தொடர்பாக சீனா உள்ளிட்ட எந்த நாட்டுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்ட தகவல்கள் தவறானவை. இலங்கை எல்லைக்குள் எந்த சூழ்நிலையிலும், எந்த நாடும் அதன் ராணுவ தளத்தை அமைக்க அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

நன்றி – தி ஹிந்து 

பயங்கரவாத காலத்தில் தனது தந்தையை கொல்ல வந்த கொலையாளி தற்போது அனுரகுமார திஸாநாயக்கவின் மேடையில் இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிடுகின்றார்.

சமகி ஜன பலவேகய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அப்போது ஜனதா விமுக்தி பெரமுனாவால் மக்கள் கட்சியைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாகவும், அப்போது தனது தந்தையும் மக்கள் கட்சியில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொலையாளிகள் வந்து தனது தந்தையை சுட முற்பட்டபோது, கொலையாளிகளுடன் தனது தந்தை சண்டையிட்டு கொலையாளிகளின் துப்பாக்கியால் கொலையாளியை சுட்டதாகவும்  அவர் கூறினார்.

கொலைக்காக வந்த நபர் இன்று அனுரகுமார திஸாநாயக்கவின் மேடையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், விரைவில் அந்தப் பெயர்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மே மாத நடுப்பகுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை வரை வெப்பமான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய காலநிலை ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் நிபுணர் பபோதினி கருணாபால தெரிவித்துள்ளார்.

காற்றின் வேகம் குறைவடைந்துள்ளமை மற்றும் வளிமண்டலத்தின் பல பகுதிகளில் நீராவி அதிகரித்துள்ளமையே இந்த நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார், ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் வெப்பமான காலநிலை நிலவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அதிக தண்ணீர் குடிக்கவும், சூரிய ஒளி படாமல் இருக்கவும், குழந்தைகளை வெளிப்புற விளையாட்டுகளுக்கு அனுப்ப வேண்டாம், முதியோர்களை உன்னிப்பாக கவனிக்கவும் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்க்க அன்றைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவே பிரதான சதிகாரர் என முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

ஜெனரல் எகொடவெல கோட்டாபய ராஜபக்சவை யாரையும் சந்திக்க அனுமதிக்காமல்  தடுத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாடாவும் சித்து விளையாட்டு விளையாடியதாக அவர் கூறுகிறார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் 150 முதல் 180 பேர் கொண்ட குழுவொன்று மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்சவின் வீட்டை சுற்றி வளைத்ததாகவும் மேலும் கோட்டாபய ராஜபக்சவை கொல்ல ஆயத்தங்கள் நடந்ததாகவும், அதற்காகவே முஸ்லிம்கள் அங்கு இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது மக்களின் அபிப்பிராயத்தின் யதார்த்தத்தை சரியாகப் பிரதிபலிக்காது.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், அந்த கட்சி 2020 ஆம் ஆண்டு போன்று பாராளுமன்றத்தில் கணிசமான பெரும்பான்மையை பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமச்சீர் நாடாளுமன்றத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.

மேலும், நாட்டின் முக்கியமான தேசிய தேர்தல்கள், ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை ஒத்திவைக்கும் எந்தவொரு முயற்சியையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார்.

தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அது உண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் காப்புறுதி தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான HNB General Insurance, வாடிக்கையாளர்களுக்கு வாகன மற்றும் வாகனம் அல்லாத காப்புறுதிகள் ஆகிய இரண்டிலும் 12 மாத, 0% வட்டி திட்டங்களை வழங்குவதற்காக சம்பத் வங்கியுடன் கூட்டுப் பங்காளித்துவத்தை அறிவித்துள்ளது. HNB General Insurance குழுவில் அங்கம் வகிக்காத வங்கியுடனான ஒத்துழைப்பைக் குறிப்பதோடு, இலங்கை முழுவதிலும் உள்ள பரந்த வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதியை அணுகக்கூடியதாக மாற்றி, அதன் எல்லையை பாரிய அளவில் விரிவுபடுத்துவதை இது காட்டுகிறது.

இந்த கூட்டாண்மை மூலம், சம்பத் வங்கி கடனட்டை வைத்திருப்பவர்கள் தற்போது தங்கள் காப்புறுதிக் கட்டணத்தை தங்களுக்கு ஏற்ற தவணைகளில் செலுத்துவதற்கான வசதியை பெற முடியும். முன்கூட்டிய வட்டிக் கட்டணங்கள் ஏதுமின்றி, வாடிக்கையாளர்கள் தங்கள் வாகன, வீட்டு, பயண, மருத்துவ அல்லது வாகனம் அல்லாத வேறு ஏதேனும் காப்புறுதி திட்ட கட்டணத்தை ஒரு வருட காலம் வரை செலுத்தலாம். இது நிதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அத்தியாவசிய காப்புறுதியை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது.

HNB General Insurance பிரதம வணிக அதிகாரியும் பொது முகாமையாளருமான சம்பத் விக்ரமாராச்சி இது பற்றி தெரிவிக்கையில், எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த தனித்துவமான நன்மையை வழங்குவதற்காக, இலங்கையில் மிகப் பெரிய வங்கி அட்டை தளத்தையும் விரிவான வலையமைப்பையும் கொண்ட முன்னணி வங்கியான சம்பத் வங்கியுடன் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒத்துழைப்பானது, காப்புறுதியை மிகவும் உள்ளீர்க்கப்பட்டதாகவும், அனைவருக்கும் கட்டுப்படியானதாகவும் மாற்றுவதற்கான எமது உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டுகிறது.

முன்கூட்டிய வட்டிச் செலவுகளை நீக்குவதன் மூலம், பெருமளவிலான மக்கள் தமது காப்புறுதியையும், மன அமைதியையும் பெற இதன் மூலம் முடியும் என நாம் நம்புகிறோம். என்றார்.

சம்பத் வங்கியின், வங்கி அட்டை மையத்தின் உதவிப் பொது முகாமையாளர் ஷிரான் கொஸ்ஸின்ன இது பற்றி தெரிவிக்கையில், “எமது வங்கி அட்டை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ‘மதிப்புமிக்க ஒப்பந்தங்களை’ வழங்குவதற்கான வழிகளை நாம் எப்போதும் தேடுகிறோம். HNB General Insurance உடனான இந்த கூட்டாண்மை அந்த இலக்குடன் முழுமையாக ஒத்துப்போகிறது. எமது வாடிக்கையாளர்கள் தமது காப்புறுதிச் செலவுகளை மிகவும் திறம்படவும் வசதியாகவும் நிர்வகிக்க இது உதவுகிறது. என்றார்.

வாடிக்கையாளர்களுக்கான முக்கிய நன்மைகள்:

● 0% வட்டி: உங்கள் காப்புறுதிக் கட்டணத்தின் செலவை 12 மாதங்களுக்குள் எந்தவிதமான வட்டிக் கட்டணமும் இல்லாமல் செலுத்தலாம்.

● பரந்த அளவிலான தயாரிப்புகள்: HNB General Insurance வழங்கும் வாகன மற்றும் வாகனம் அல்லாத காப்புறுதி திட்டங்கள் ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது.

● வசதி: தடையற்ற அனுபவத்திற்கு உங்களின் நம்பகமான சம்பத் வங்கி கடனட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

● கட்டுப்படியானது: காலத்துடன் செலவை திட்டமிடுவதன் மூலம் அத்தியாவசிய காப்புறுதியை அனைவரும் அணுகக்கூடியதாக ஆக்குகிறது.

HNB General Insurance ஒரு அர்ப்பணிப்புள்ள பங்காளியாகும். அது இலங்கை முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வாகனம் முதல் வாகனம் அல்லாத மற்றும் தக்காபுல் தீர்வுகள் வரை பல்வேறு வகையான காப்புறுதித் தேவைகளை பூர்த்தி செய்கிறது. HNB Assurance PLC இன் துணை நிறுவனமும், HNB குழுமத்தின் ஒரு அங்கத்தவருமான HNB General Insurance பரந்த அளவிலான கிளை வலையமைப்புகளுடன் செயற்படுவதன் மூலம், நாடு முழுவதும் விரிவான சேவையை உறுதி செய்கிறது. Fitch Ratings Lanka Limited இன் ‘A- (lka)’ காப்புறுதி நிதி வலிமை மதிப்பீட்டைக் கொண்ட HNB General Insurance, புத்தாக்கம் மற்றும் பராமரிப்பு மூலம் பங்குதாரர்களுக்கு நிலைபேறான மதிப்பை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.

 

ராஜபக்சக்கள் நாட்டில் திருடியதன் காரணமாகவே ஏழையாகி விட்டோம். அந்த பணங்களை மீட்பதற்கான முறைமையை இன்று வரை காணவில்லை' என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

‘தருண அபே உத்தம’ என்ற பெயரில் ‘ஐக்கிய இளைஞர் சங்கம்’ ஏற்பாடு செய்திருந்த சிநேகபூர்வ சந்திப்பின் போதே ஜனாதிபதியிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.

ஜனாதிபதி பின்வருமாறு பதிலளித்தார்.

'நாங்கள் வாங்கிய கடனைப் பார்க்கும்போது, உலகப் பணக்காரரிடம் போனாலும், அந்த வேலையைச் செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. இவ்வளவு கடன் வாங்கியிருக்கிறோம். எனவே இலங்கையில் இருந்து எடுத்த பணத்தை மீளப் பெற்றுக் கொண்டு இதனைத் தீர்க்கலாம் என ஓரிருவர் கூறினால் அது முற்றிலும் பொய்யானது.

ஒரு நாடாக நாம் பாரியளவு கடனைப் பெற்றுள்ளோம். இந்த கடனை செலுத்த 2042 வரை கால அவகாசம் கேட்டுள்ளேன். எனவே ஓரிருவர் பணத்தைத் திரும்பப் பெற்று இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று யாராவது கூறினால் அது முற்றிலும் தவறானது.

மேலும், தற்போது புதிய ஆணைக்குழுவை நியமித்துள்ளோம், யார் வேண்டுமானாலும் அங்கு சென்று தகவல்களை வழங்க முடியும். அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் இதனை செயற்படுத்தியுள்ளோம். வழக்குத் தொடரக்கூடியவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. மற்றவர்களின் சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. இது தொடர்பான உண்மைகளை யார் வேண்டுமானாலும் புதிய ஆணையத்திடம் தெரிவிக்கலாம். அந்த விவகாரங்களில் அரசு தலையிடாது.

மேலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக நானும் உழைத்து வருகிறேன். அதற்காக பல வழக்குகள் போட்டுள்ளோம். அத்துடன், சுயாதீன ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான பயிற்சிக் குழுக்கள் போதுமானதாக இல்லாததால், வெளிநாடுகளிலும் தேவையான ஆதரவைக் கோரப்பட்டுள்ளது.

நாட்டின் பணத்தை மோசடி செய்தவர்களை தண்டித்து பணத்தை மீட்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த இரண்டு பிரச்சினைகள் வேறு என்பதை நாம் எப்போதும் உணர்ந்து அவற்றைக் கையாள வேண்டும்.

உத்தேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு சட்டமூலத்தை கைவிடுமாறும், இணையவழி பாதுகாப்புச் சட்டத்தை தடை செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.

மனித உரிமைகள் நியமங்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிவில் சமூகத்தை கடுமையாக ஒடுக்கும் மற்றும் நாட்டில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையிலான சட்டமூலங்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் தனது வேலைத்திட்டத்தின் நம்பகத்தன்மையையும் வினைத்திறனையும் பாதுகாப்பதற்காக குறித்த உத்தேச சட்டமூலங்களை திருத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd