web log free
May 08, 2024

100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை- சைக்கோ ஆசாமி

சென்னையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேடவாக்கம் பகுதியில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேம்பாலத்தில் டி.சர்ட் அணிந்தபடி ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாநகரில் இது போன்று தனியாக செல்லும் பெண்களை குறிவத்து பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வட சென்னை பகுதியான எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, பெரம்பூர், கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் இளம்பெண்களை பின் தொடர்ந்து சென்றும், எதிர் திசையில் தனியாக வரும் பெண்களிடமும் துணிச்சலாக வாலிபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தார்.

பெண்களின் அருகில் சென்றதும் மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்து தனது சேட்டையை தொடங்கும் அந்த வாலிபர் பெண்களின் உடலை தொட்டு பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி தப்பிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். எம்.கே.பி.நகர் 14-வது அவென்யூ பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 7 மணி அளவில் நடுத்தர வயதை சேர்ந்த பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக மழையும் பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த வாலிபர் பெண்ணின் நெஞ்சில் கைவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார். செயினை பறிப்பதற்காகவே வாலிபர் முயற்சித்திருக்கலாம் என்று எண்ணிய அந்த பெண் வாலிபரின் செயலை திரும்ப திரும்ப அசை போட்டு பார்த்தார்.

அப்போதுதான் அவருக்கு வாலிபர் செயினை பறிக்க முயற்சிக்கவில்லை என்பதும், பாலியல் கண்ணோட்டத்துடனேயே தன்மீது கை வைத்ததையும் உணர்ந்தார். இது தொடர்பாக எம்.கே.பி.நகர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இதுபோன்று சட்டக் கல்லூரி மாணவி ஒருவரின் பின்பகுதியில் அவரது உடலை தொட்டு பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் சைக்கோ வாலிபர் தப்பிச் சென்றதும் தெரிய வந்தது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இப்படி தொடர்ச்சியாக எம்.கே.பி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோட்டில் தனியாக செல்லும் இளம் பெண்களை குறிவைத்து தொடர்ச்சியாக அந்த வாலிபர் சீண்டலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். இது தொடர்பாக போலீசுக்கு புகார்கள் வந்த போதிலும் அவர் யார்? என்பது மர்மமாகவே இருந்தது.

இது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இணை கமிஷனர் ரம்யாபாரதி, துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோரது மேற்பார்வையில் எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் பாலியல் சைக்கோ வாலிபரை பிடிக்க அதிரடி வேட்டையில் இறங்கினர். இது தொடர்பாக கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் இரவு நேரங்களில் மட்டுமே சென்று கைவரிசை காட்டி வந்ததால் அவரது மோட்டார் சைக்கிள் எண் சரியாக தெரியவில்லை. இருப்பினும் அதனை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

இதில் சைக்கோ வாலிபர் சென்ற மோட்டார் சைக்கிள் எண்ணின் கடைசி நம்பர் 7 என்பது மட்டும் தெரியவந்தது. அதை வைத்து போலீசார் ஆய்வை துவக்கினர். முகம் தெரியாமல் இருப்பதற்காக ஹெல்மெட் அணிந்து கொண்டே 'பாலியல்' சீண்டலில் சைக்கோ வாலிபர் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. வெள்ளை சட்டை பேண்ட் அணிந்துகொண்டு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சுற்றிய ஒரே ஒரு போட்டோ மட்டும் போலீசில் சிக்கியது. அதிலும் முகம் தெரியாத நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

முதலில் மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து விசாரணையை துவக்கினர். பெண்களிடம் தொடர்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரின் பெயர் பிரகாஷ் என்பது தெரிய வந்தது. அவரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது ஏன்? என்பது பற்றி அவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.

ஏதோ மோகத்தில் பெண்களிடம் இதுபோன்று தவறாக நடந்து கொண்டேன். நான் செய்தது தப்புதான். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் பரவி வருகிறது. போலீஸ் விசாரணையில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பிரகாஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஓராண்டாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு காமப் பார்வையை வீசியபடியே சுற்றி திரிந்த சைக்கோ வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.