web log free
April 16, 2024

கொடநாடு கொலைப்பழி! ஆத்திரத்தில் எடப்பாடி

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் தனது பெயர் இழுக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் திமுக இருப்பதை அறிந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் ஆத்திரத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவின் பிரமாண்ட பங்களாவில் கொள்ளை அடிக்கப்பட்டது.

அப்போது காவலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் இந்த கொள்ளை வழக்கில் தேடப்பட்ட கனகராஜ் என்பவர் விபத்தில் உயிரிழந்தார். மேலும் மற்றொரு முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கேரளாவை சேர்ந்த சயந்த் என்பவரின் காரும் விபத்தில் சிக்கியது.

ஆனால் சயந்த் அதிர்ஷ்டவசமாக தப்பினார். ஆனால் அவரது மனைவி மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து கொடநாட்டில் சி.சி.டி.வி கேமரா ஆப்பரேட்டராக இருந்த தினேஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த ஐந்து மரணங்களுமே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொலை என்கிற சந்தேகம் மட்டும் அனைத்து தரப்பினருக்கும் இருந்தது.

அதிலும் கொலை, கொள்ளை வழக்கில் தேடப்பட்ட கனகராஜ் விபத்தில் இறந்தது தான் இந்த வழக்கில் ஹைலைட். மேலும் அந்த கனகராஜ் முதலமைச்சர் எடப்பாடியின் சொந்த ஊர்காரர். மேலும் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்றும் கூறப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் கனகராஜ் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு டிரைவராகவும் இருந்துள்ளார்.

அவர் கொடநாட்டிற்கு சென்று கொள்ளை அடித்துவிட்டு காவலாளியை கொலை செய்துவிட்டு சொந்த ஊரில் ஹாயாக சுற்றிக் கொண்டிருந்த போது விபத்தில் உயிரிழந்தார். இப்படி இந்த கொடநாட கொள்ளை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக உயிரிழந்த விவகாரம் குறித்து ஒரு ஆவணப்படம் உருவாகியுள்ளது.

இந்த ஆவணப்படத்தை புகழ்பெற்ற தெஹல்கா இணையதளத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யுஸ் தயாரித்துள்ளார். மேலும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சயந்த் உள்ளிட்ட 2 பேரை நேரில் சந்தித்து பேட்டி எடுத்த வெளியிட்டுள்ளார்.

அத்தோடு சயந்தை டெல்லி அழைத்துச் சென்று அங்கு செய்தியாளர் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்துள்ளார். அப்போது பேசிய சயந்த், கொடநாடு கொள்ளைக்கு திட்டம் போட்டுக் கொடுத்தது கனகராஜ் தான் என்றார். கனகராஜ் கொடநாட்டில் இருந்து சில ஆவணங்கள் மற்றும் ஹார்டு டிஸ்க், வீடியோ கேசட்டுகளை மட்டுமே திருட வேண்டும் என்று கூறினார்.

எதற்காக அவற்றை திருட வேண்டும், யாரிடம் அதனை கொடுக்க வேண்டும் என்று கேட்ட போது எடப்பாடி பழனிசாமி பெயரை கூறியதாகவும் சயந்த் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று கேட்ட போது எடப்பாடி பழனிசாமி இருப்பதால் எந்த பிரச்சனையும் வராதது என்று கூறியதாகவும், கொள்ளை அடித்து கொடுத்தால் ஐந்து கோடி ரூபாய் கொடுப்பதாகவும் கனகராஜ் கூறியதாக சயந்த் தெரிவித்தார். ஆனால் கனகராஜ் உயிரிழந்த பிறகு இந்த விவகாரம் மிகவும் மோசமாகிவிட்டதாகவும் சயந்த் கூறினார்.

மேத்யூசின் ஆவணப்படம் டெல்லியில் ஒளிபரப்பான போது தி.மு.க ஆதரவு தொலைக்காட்சி இரண்டுமே நேரலையாக ஒளிபரப்பின. நடுநிலை சேனல்கள் சில சில நிமிடங்கள் ஒளிபரப்பிய நிலையில் எடப்பாடி பழனிசாமி பெயர் வெளியானதும் ஒளிபரப்பை நிறுத்திவிட்டன.

ஆனால் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் தொடர்ந்து அந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தன. போதாக்குறைக்கு தி.மு.கவின் ஐ.டிவிங் அனைத்து தொலைக்காட்சி உயர் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு அந்த வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்புமாறு கேட்டுக் கொண்டே இருந்தனர்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி பெயர் அடிபடுவதால் அந்த ஆவணப்படத்தை எந்த நடுநிலை தொலைக்காட்சியும் மீண்டும் ஒளிபரப்பவில்லை. அதே சமயம் டெல்லியில் மாத்யுஸ் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பிற்கு தி.மு.க பின்னணியில் இருந்ததாக சொல்லப்பட்டது.

மேலும் அந்த ஆவணப்படம் உடனடியாக வாட்ஸ் ஆப்பில் பரவியதிலும் தி.மு.கவின் ஐ.டி விங் தீவிரமாக செயல்பட்டுள்ளது. இந்த விஷயங்களை எல்லாம் கேட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செம டென்சன் ஆகியுள்ளார்.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு கொலை குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்னை பற்றி கண்டபடி பேசுவான் அதனை தொலைக்காட்சிகள் நேரலை செய்யுமா? என்று சத்தம் போட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தின் பின்னணியை ஆராய்ந்த போது பின்னணியில் தி.மு.க இருப்பதை எடப்பாடி தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து தி.மு.கவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலினுக்கு எதிராக வலுவான ஸ்கெட்ச் போடும்படி எடப்பாடி கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ஆவணப்பட விவகாரம் அப்படியே அமுங்காது என்று மட்டும் தெரிகிறது.