web log free
March 29, 2024

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31இல் வெளியிடப்படும்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் திகதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தவறாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள், அதை திருத்தம் செய்துகொள்வதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதன்படி, செப்டம்பர், அக்டோபர் ஆகிய 2 மாதங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்துகொள்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இம்மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான வலைத்தளம் புதிதாக உருவாக்கப்பட்டு, வாக்காளர்களின் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதால், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதில் தொய்வு ஏற்பட்டது.

மேலும், இந்த புதிய வலைத்தளம் மூலம் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இருந்தால், அதை உடனடியாக கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில், தமிழகத்தில் சுமார் 10 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த பெயர்களை இனங்கண்டு நீக்கும் முறை தற்போது நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக, குறிப்பிட்ட வீடுகளில் ஆய்வு செய்யும் பணியில் தேர்தல் பணி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட ஜனவரி 10-ந் தேதி வரை கால அவகாசம் வழங்க தமிழக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை வரும் 21-ந் தேதி (நாளை மறுநாள்) வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இடையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வேறு வந்ததால், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவை நீக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, மீண்டும் அந்த பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வரும் 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க 1-1-2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, தீவிர முறையிலான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் முதலியவற்றுக்கான படிவங்கள் 1-9-2018 முதல் 31-10-2018 வரை பெறப்பட்டன.

முன்பு அறிவித்த நீட்டித்த கால அட்டவணையின்படி, இறுதி வாக்காளர் பட்டியல்கள் 21-1-2019 அன்று வெளியிடப்பட்டிருக்க வேண்டும். பிழைகளற்ற வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், சேர்த்தல், நீக்கல் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொள்ளுவதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் 2 கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இதன் தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியல்களில் காணப்படும் தவறுகள், ஒன்று போலுள்ள பதிவுகள் ஆகியவற்றை கண்டறிந்து உரிய களவிசாரணை மேற்கொண்டு இரட்டைப்பதிவுகளை நீக்கி, இந்திய தேர்தல் ஆணையத்தின் “ஈஆர்ஓ நெட்” மென்பொருள் மூலம் அச்சிடும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இப்பணிகளுக்கு மேலும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால் இறுதி வாக்காளர் பட்டியல்களை 31-1-2019 அன்று வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 31-1-2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ElectionCommission