web log free
April 26, 2024

சர்வதேச போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்குத் தடை

அனைத்துவிதமான (முக்கியமான) சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்பதற்கு ரஷ்யாவிற்கு நான்கு வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக, உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் (2020) மற்றும் உலகக் கிண்ண கால்பந்து (2022) ஆகியனவும் இதில் உள்ளடக்கம்

உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் (வாடா) அனைத்து முக்கிய விளையாட்டு நிகழ்வுகளிலிருந்தும் ரஷ்யாவிற்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின்போது,ரஷ்யா கொடி மற்றும் கீதம் அனுமதிக்கப்படமாட்டாது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், ஊக்கமருந்து ஊழலில் தான் சம்பந்தப்படவில்லை என்பதை நிரூபிக்கும்   விளையாட்டு வீரர்கள் நடுநிலையான ஒரு கொடியின் கீழ் போட்டிகளில் பங்கேற்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தின் லொசேன் நகரில் இடம்பெற்ற அந்த அமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த வருடம், ஜனவரி மாதம் புலனாய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆய்வக தரவுகளை கையாள்வதற்கு ரஷ்யாவின் ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் இணங்க மறுத்த நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அரசpன் உதவியுடன் இடம்பெற்ற ஊக்கமருந்து மோசடி தொடர்பில் மூன்று ஆண்டுகள் இடைக்காலத் தடைக்கு பின்னர், சரியான தரவுகளை உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய கடமை, ரஷ்ய  ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்திற்கு காணப்பட்டது.

எனினும் அதனை அந்த நிறுவனம் செய்திருக்கவில்லை.

தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய ரஷ்யாவிற்கு 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.