web log free
April 17, 2026

மீண்டும் அமெரிக்காவில் எச்1பி விசா சிறப்பு பரிசீலனை

அமெரிக்காவில் 3 ஆண்டு காலம் தங்கி இருந்து வேலை பார்ப்பதற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வழங்கப்படுகிற விசா ‘எச்-1 பி’ விசா ஆகும்.

இந்தியாவில் ஐ.டி. என்று அழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடம் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது. குறிப்பாக 70 சதவீதம் ‘எச்-1 பி’ விசாக்கள் இந்தியர்களுக்கே கிடைக்கிறது.

அமெரிக்க நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களை இந்த விசாவின் கீழ் பணி அமர்த்துவது வழக்கம். குறிப்பாக மைக்ரோசாப்ட், அமேசான், கூகுள் நிறுவனங்கள் இந்த விசாவின்கீழ்தான் வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறது.

அமெரிக்க அரசு, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 65 ஆயிரம் ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்குகிறது. இது தவிர்த்து அமெரிக்காவில் உயர்கல்வி பெற்றவர்கள் 20 ஆயிரம் பேருக்கு கூடுதலாக இந்த விசா வழங்கப்படும். இந்த விசாக்கள் வழங்குவதற்கான பிரிமியம் பிராசசிங் என்று அழைக்கப்படுகிற சிறப்பு பரிசீலனை நடைமுறையை அமெரிக்கா கடந்த ஆண்டு திடீரென நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில் மறுபடியும் ‘எச்-1 பி’ விசா பிராசசிங் நடைமுறை நாளை (திங்கட்கிழமை) தொடங்கும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு அறிவித்து உள்ளது.

ஒரு விண்ணப்பதாரர் தனது ‘எச்-1 பி’ விசா விண்ணப்பத்தை ‘பிரிமியம் பிராசசிங்’ நடைமுறையை பின்பற்றி பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டு, உரிய கட்டணத்தை செலுத்திவிட்டால், இதுபற்றி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு 15 நாளில் பரிசீலித்து முடிவு எடுத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd