web log free
April 16, 2024

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடையும்: பிரிட்டன் விஞ்ஞானிகள்

கடந்த ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தியது. இதன் காரணமாக, கடந்த ஆண்டில் அமுல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் தற்போது பல நாடுகளில் இயல்பு நிலைக்‍கு திரும்பிவரும் நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் வீரியம் அடைந்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

வௌவால்களிலிருந்து மனிதர்களை தாக்கும் வைரஸ் எந்த அளவு வீரியத்துடன் உடலை பாதிக்கும் என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில், பிற வைரஸ்கள் போலவே பலவித உருமாற்றங்களை கொரோனா வைரஸ் அடைகிறது என்றும், பொதுவாக பறவைகளிடமிருந்து மனிதர்களது உடலுக்குள் செல்லும் வைரஸ், மனிதர்களின் மரபணுவுக்கு ஏற்றதுபோல தன்னை உருமாற்றிக்கொள்கிறது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்த உருமாற்றம் இதோடு நிற்காமல் மென்மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.