web log free
April 25, 2024

பங்களாதேஷின் தெற்கில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம் ஒன்றில் தீ விபத்து

பங்களாதேஷின் தெற்கில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம் ஒன்றில் திங்கட்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக் கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், பலர் உயிரிழந்தும் உள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காக்ஸ் பஜாரின், உக்கியாவில் அமைந்துள்ள பலுகாலி அகதிகள் முகாமில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இரண்டு குழந்தகைளும், ஒரு பெண் உட்பட நான்கு ரோஹிங்கியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக் கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளதாக  டெய்லி ஸ்டார் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை(நேற்று) மாலை 4.00 மணியளவில் தீ பரவல் ஆரம்பமானது, அதனை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் இரவு 11.00 மணிக்கு பின்னர் மீண்டுமோர் தீப் பரவல் வெடித்தது. அது அதிகாலை 12.30 மணியளவில் கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ரோஹிங்கியா சமூகத் தலைவர்களும் அதிகாரிகளும் விபத்துக்கள் குறித்து த டெய்லி ஸ்டாரிடம் தகவல் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் இன்னும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

தீ விபத்தால் 1,500 தொடக்கம் 2,000 வீடுகள் முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளன. 5,000 தொடக்கம் 6,000 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று பங்களாதேஷின் கூடுதல் அகதிகள், நிவாரண மற்றும் திருப்பி அனுப்பும் ஆணையாளர் மொஹமட் ஷம்சுடோசா தெரிவித்தார்.

மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 10 இலட்சம் முஸ்லிம் சிறுபான்மையினர் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள முகாம்களில் நெருக்கடியான மற்றும் மோசமான நிலையில் வாழ்கின்றனர். பலர் 2017 ஆம் ஆண்டில் தங்கள் தாயகத்தில் இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பியோடியவர்கள் ஆவர்.