web log free
March 29, 2024

யுத்தம் வரை செல்லும் அளவிற்கு ரஷ்யா - உக்ரைன் இடையே அப்படி என்னதான் பிரச்சினை?

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. நீண்டகாலமாக மோதல் போக்கும் நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் இடையே உள்ள பிரச்சனை என்ன?. அமெரிக்க அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் முதல் ஜோ பைடன் வரை இதில் தலையிடுவதற்கான காரணம் குறித்த முழு தகவல்கள் வருமாறு:

ரஷ்யா, உக்ரைன் இடையே எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. மேலும் நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முயற்சிக்கிறது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவிக்க தொடங்கியது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பக்கபலமாக உள்ளன.

மேலும் ரஷ்யா போர் தொடுக்க உள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. இதற்கிடையே தான் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை துவங்க ரஷ்யா அதிபர் விலாடிமர் புடின் உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக உக்ரைன் தலைநகர் கிவ், மிகப்பெரிய நகரான கார்கியாவில் ரஷ்யா குண்டுகள் வீசி வருகிறது.

உக்ரைன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் ஒரு பகுதியில் வசித்து வருகிறார்கள். இதனால் அவ்வப்போது உக்ரைன், கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் ஏற்படுவது உண்டு. இந்த மோதலில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவுவதும் உண்டு. இதனால் தான் ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்னை ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது.

 உக்ரைன் தனிநாடாக பிரிந்த பிறகு அங்கு நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1991: மாஸ்கோவில் இருந்து விடுதலை அளிப்பதாக சோவியத் குடியரசின் தலைவர் லியோனிட் கிராவ்சுக் அறிவித்தார். பொதுவாக்கெடுப்பு, தேர்தல் மூலம் உக்ரைன் அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

1994: அதிபர் தேர்தலில் லியோனிட் குச்மா என்பவர் லியோனிட் கிராவ்சுக்கை தோற்கடித்தார்.

1999: லியோனிட் குச்மா மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2004: ரஷ்யா சார்ந்த வேட்பாளர் விக்டர் யானுகோவிச் அதிபராக தேர்வானார். தேர்தல் ஓட்டுப்பதிவில் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ஆரஞ்சு புரட்சி என்ற பெயரில் மறுதேர்தல் நடத்த போராட்டங்கள் வெடித்தன. விக்டர் யுஷ்செங்கோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2005: விக்டர் யுஷ்செங்கோ என்பவர் உக்ரைனை நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதாக கூறி அதிபரானார். முன்னாள் எரிசக்தி நிறுவன உரிமையாளர் யூலியா திமோஷென்கோவை பிரதமராக நியமித்தார். அதன்பின் மேற்கத்திய நாடுகளுடனான பிரச்னைகளில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

* 2008: உக்ரைன் ஒரு நாள் தங்களது கூட்டணியில் இணையும் என நேட்டோ உறுதியளித்தது

ரஷ்யா உக்ரைன் ஒப்பந்தம்

2010: அதிபர் தேர்தலில் யானுகோவிச் வெற்றி பெற்றார். கியாஸ் விலை நிர்ணய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உக்ரைன் கருங்கடல் துறைமுகத்தில் ரஷ்ய கடற்படைக்கான குத்தகை ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டது.

2013: யானுகோவிச்சின் அரசு நவம்பரில் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகம் தொடர்பான பேச்சுக்களை நிறுத்தியது. ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை புதுப்பிக்க விரும்பினார். இதற்கு எதிர்ப்பு கிளம்பி தலைவர் கிவ் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டன.

2014: கிவ் நகரில் வன்முறை வெடித்தது. பலர் கொலை செய்யப்பட்டனர். பிப்ரவரியில், தப்பியோடிய யானுகோவிச்சை பாராளுமன்ற ஓட்டெடுப்பு மூலம் பதவியில் இருந்து நீக்கினர். அடுத்த சில தினங்களில் கிரிமியாவில் உள்ள பாராளுமன்றத்தை ஆயுதம் ஏந்திய நபர்கள் கைப்பற்றி ரஷ்ய கொடி ஏற்றினர். ரஷ்ய கூட்டமைப்பில் சேருவதற்கான வாக்கெடுப்பு மார்ச் 16ல் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பு மூலம் கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது.

* இதன் தொடர்ச்சியா ஏப்ரலில் உக்ரைன் டான்பாஸின் கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் சுதந்திரத்தை அறிவித்து கொண்டனர். இதனால் அடிக்கடி மோதல்கள் ஏற்பட துவங்கின.

* மே மாதம் உக்ரைனில் நடந்த தேர்தலில் தொழிலதிபர் பெட்ரோ பொரோஷென்கோ அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

* ஜூலை மாதம் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குச் சென்ற MH17 எனும் பயணிகள் விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடந்தது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர். இதுபற்றிய விசாரணையில் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பது தெரியவந்தது. ஆனால் ரஷ்யா இதுவரை தாக்குதலை ஒப்புக்கொள்ளாமல் மறுத்து வருகிறது.

2017: இலவச சரக்கு விற்பனை செய்வது தொடர்பாக உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியங்களுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் நாட்டினர் விசா இன்றி பயணிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. இது ரஷ்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

2019: புதிய உக்ரேனிய ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் முறையான அங்கீகாரத்தைப் பெற்றது. இது கிரிமீயம் கோபப்படுத்தியது. கிரெம்ளினைக் கோபப்படுத்தியது.

2019: கிழக்கு உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், ஊழலை ஒழிப்பதாகவும் கூறி முன்னாள் நகைச்சுவை நடிகர் விலாடிமைர் ஜிலென்ஸ்கி வாக்குறுதி அளித்து ஏப்ரலில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு போரோஷென்கோவை தோற்கடித்தார். மேலும் அவரது கட்சி ஜூலையில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றது.

* மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி பயத்தில் இருந்த டொனால்ட் டிரம்ப், ஜிலென்சிகியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜோபைடன் மகன் உக்ரைனில் மேற்கொள்ளும் தொழில், வர்த்தகங்கள் குறித்து விசாரிக்க வலியுறுத்தினார்.

2020 மார்ச்: கொரோனாவை தடுக்கும் வகையில் உக்ரைன் தனது நாட்டு எல்லைகளை மூடியது.

* ஜூன் 2020: கொரோனாவால் பொருளாதாரத்தில் நசுங்கிய உக்ரைனுக்கு சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எப்) 5 பில்லியன் அமெரிக்க டாலர் உதவி செய்தது.

ஜன. 2021 - உக்ரைனை நேட்டோவில் சேர அனுமதிக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோபைடனிடம் பிடனிடம் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார்.

பிப். 2021 - உக்ரைனில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரான விக்டர் மெட்வெட்சுக் பொருளாதாரா தடைகள் விதிக்கப்பட்டது.

* 2021: உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவிக்க துவங்கியது. பயிற்சிக்காக படைகளை குவித்துள்ளதாக கூறியது.

* அக்டோபர் 2021: கிழக்கு உக்ரைனில் முதன்முறையாக துருக்கி பய்ராக்டர் டிபி2 (Bayraktar TB2) ட்ரோனை உக்ரைன் பயன்படுத்தியது. இது ரஷ்யாவை கோபப்படுத்தியது. ரஷ்யா மீண்டும் உக்ரைன் எல்லையில் அதிக படைகளை குவிக்க துவங்கியது.

* டிசம்பர் 7 - உக்ரைனை ஆக்கிரமித்தால் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என என அமெரிக்க அதிபர் ஜோபைடன் ரஷ்யாவை எச்சரித்தார்.

* டிசம்பர் 17 - கிழக்கு ஐரோப்பா, உக்ரைனில் எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் நேட்டோ மேற்கொள்ளாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியது.

* 2022 ஜனவரி 14: உக்ரைன் நாட்டு இணையதளங்களை முடக்கும் செயல் அரங்கேற்றப்பட்டது.

* ஜனவரி 17 - உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள பெலாரஸ் நகருக்கு கூட்டு பயிற்சிக்காக ரஷ்ய படைகள் வர துவங்கின.

* ஜனவரி 24: நேட்டோ சார்பில் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. கிழக்கு ஐரோப்பாவில் போர் கப்பல்கள், விமானங்கள் நிறுத்தப்பட்டன.

* ஜனவரி 26: வாஷிங்டன் ரஷ்யாவின் பாதுகாப்பு கோரிக்கைகளுக்கு எழுத்துப்பூர்வ பதிலை முன்வைக்கிறது, மாஸ்கோவின் கவலைகள் பற்றிய "நடைமுறை" விவாதங்களை வழங்கும் அதே வேளையில் நேட்டோவின் "திறந்த கதவு" கொள்கைக்கான உறுதிப்பாட்டை மீண்டும் கூறுகிறது.

* ஜனவரி 28: ரஷ்யாவின் முக்கிய பாதுகாப்பு கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார்.

* பிப்ரவரி 2: கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ நட்பு நாடுகளை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற போலந்து மற்றும் ருமேனியாவுக்கு 3,000 வீரர்களை அனுப்புவதாக அமெரிக்கா கூறியது.

* பிப்ரவரி 4 : பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில், புடின், உக்ரைனை நேட்டோவில் சேர அனுமதிக்கக்கூடாது என்ற தனது கோரிக்கைக்கு சீனாவின் ஆதரவை வென்றார்.

பிப்ரவரி 9: உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியது.

பிப்ரவரி 14: ரஷ்யா படையெடுக்கும்போது உக்ரைன் மக்கள் தேசியக்கொடிகளை பறக்கவிட்டு தேசியகீதத்தை பாட உக்ரைன் அதிபர் ஜிலென்ஸ்கி கூறினார்.

பிப்ரவரி 15: உக்ரைன் அருகே பயிற்சிக்குப் பிறகு வீரர்கள் நாடு திரும்புவதாக ரஷ்யா கூறியது. கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகளை சுதந்திர நாடாக அறிவிக்க ரஷ்ய பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பிப்ரவரி 19: புடின் மேற்பார்வையில் ரஷ்ய படைகள் அணுஆயுத பயிற்சியை மேற்கொண்டன.

பிப்ரவரி 21: கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்யா ஆதரவு 2 பகுதிகளை சுதந்திர நாடுகளாக புடின் அங்கீகரித்தார்.

பிப்ரவரி: 24: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் துவங்க ரஷ்யா அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.