web log free
April 26, 2025

பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானம்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுத்த பின்னர் பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கு அமைய ரணில் விக்கிரமசிங்க அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக கூறினார்.

தமிழ் மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியதன் பின்னர், இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பேச ஜனாதிபதி மேலும் உத்தேசித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd