web log free
April 16, 2024

திருடப்பட்ட பணங்களை மீட்பேன் - சஜித்

திருடப்பட்ட பணத்தை மீட்பதற்காக உருவாக்கப்படவுள்ள முகாமைத்துவ அதிகார சபையை வலுப்படுத்தி, இதுவரை கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பணத்தையும் மீட்பதற்கு பாடுபடுவேன் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பணமோசடி சட்டத்தை நவீனமயப்படுத்தி பலப்படுத்துவேன் எனவும் தெரிவித்தார்.

சர்வதேச நிதித்துறை சார்ந்த சிறந்த நிறுவனங்களை தொடர்புகொண்டு நிதி மோசடிக்காரர்களை இனங்காணும் நடவடிக்கையை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 75 ஆவது சுதந்திரம் கொண்டாடப்படுகின்ற போதிலும், வங்குரோத்து மற்றும் வீழ்ச்சியடைந்த நாட்டிலேயே  சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டு மக்கள் தாங்க முடியாத பொருளாதார அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பட்டினியால் வாடும் மக்கள், எதிர்பார்ப்புகளை இழந்த இளைய தலைமுறை, கல்வியை இழந்த பிள்ளைகள் பெரும் பேரழிவிற்கு மத்தியில் உள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நிலையை மாற்றி நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய சுதந்திரப் போராட்டம் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன, மத, சாதி, கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஒன்றுப்பட்டதனால் இந்த நாட்டிற்கு கிடைத்த சுதந்திரத்தை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், சுதந்திர போராளிகளுக்கு நன்றி பாராட்டினார்.

காலி மாவட்டத்தின் ஹினிதும தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.