web log free
May 02, 2024

கம்பளை ஏடிம் திருட்டு! விசாரணையில் அனைத்தும் அம்பலமாகியது

கடந்த ஜனவரி மாதம் கம்பளை ATM இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கம்பளை மற்றும் புத்தளத்தில் இருந்து தலா இரண்டு சந்தேகநபர்களும், கலஹா பிரதேசத்தில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் கம்பளையில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து ATM இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளதாகவும், அதில் இருந்த ரூ. 7.6 மில்லியன் ரொக்க பணம் மீட்கப்பட்டு அந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் பள்ளத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கைப்பற்றினர்.

ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்த போலீசார், மேலும் ரூ. 1.7 மில்லியன் ரொக்கம், ஒரு வேன், மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், இரண்டு சலவை இயந்திரங்கள், மூன்று கைத்தொலைபேசிகள் மற்றும் எரிவாயு குக்கர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மேலும் பல பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும், பல்வேறு நபர்களுடன் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அரச எதிர்ப்புப் போராட்டத்தின் போது புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் வீட்டில் இருந்து திருடப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொள்வதற்கு அந்தக் குழுவினர் குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கம்பளை பிரதேசத்தில் உள்ள அரச வங்கியொன்றிலும், இரண்டு தங்க நகைக் கடைகளிலும் இதற்கு முன்னரும் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் இந்தக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ தெரிவித்தார்.

சந்தேகநபர்களுடன் தொடர்புடைய அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.