web log free
March 28, 2024

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற ரணிலுக்கு தடையாக இருப்பது ராஜபக்ஷ அணியே

இலங்கையில் மிகக்குறைந்த பிரபல்யம் கொண்ட அரசியல்வாதியாக பசில் ராஜபக்ச தெரிவாகியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமியவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நாமல் ராஜபக்ஷவை முன்னிலையில் வைத்து மொட்டுவை சேர்ந்த சிலர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. உங்களுக்கு என்ன நடக்கும்? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, கம்மன்பில கருத்துத் தெரிவிக்கையில்,

“எங்களுக்கு எதுவும் ஆகாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மக்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்ட ராஜபக்சக்கள் அவரது அணியில் இருப்பதே மிகப்பெரும் தடையாக உள்ளது. பசில் ராஜபக்ச இலங்கையில் மிகக் குறைந்த பிரபல்யம் கொண்ட அரசியல்வாதி என ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அவர் மொட்டு தலைவர். இவ்வாறான பலத்தை தோளில் சுமந்துகொண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும் அழுத்தமாகும். எனவே தமக்கு சுமையாக இருக்கும் ஒரு கூட்டத்தை எப்படி அகற்றுவது என்று ஜனாதிபதி யோசித்துக்கொண்டிருக்கலாம். பசில் ராஜபக்ச குழுவினர் நீண்ட நாட்களாக அமைச்சுப் பதவிகளைக் கேட்டு வருகின்றனர். ஜனாதிபதி அவற்றைத் தரவில்லை. காரணம் அவர்களை காட்டிவிடும் நோக்கமாக இருக்கலாம். எவ்வாறாயினும், ராஜபக்சக்களுடன் எமக்கு எந்தவிதமான தொடர்புகளும் இல்லை." என்றார்.