web log free
September 08, 2024

அதிகாரப் பகிர்வு விடயத்தில் வடக்கு கிழக்கை இணைத்து பேச்சு நடித்த ரணில் இணக்கம்!

அதிகாரப் பகிர்வு தொடர்பிலான பேச்சுக்கு கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைப்பதில் தனக்கு எந்தவொரு ஆட்சேபமும் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் தயார்படுத்தப்படாமையால் வடக்கு அபிவிருத்தி தொடர்பான விடயத்தையும் ஒத்திவைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், த.கலையரசன் மற்றும் அந்தக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சந்திப்பின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நேற்றுமுன்தினம் சம்பந்தனின் வீட்டில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் பேச்சைத் தொடங்கியது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என்ற கருத்தியலுக்கு அமைவாகவே தமது பேச்சுக்கள் இருக்கும் என்பதை எடுத்துரைத்தனர். நாளை, நாளைமறுதினம், அதற்கு மறுநாள் என்று 3 நாள் பேச்சுக்களில் வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்தமை தொடர்பில் ஆட்சேபம் எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிக்கவில்லை என்றும், முதலில் வடக்கு மாகாணம் தொடர்பில் பேசிவிட்டு பின்னர் கிழக்கு மாகாணத்துடன் அதேபோன்றதொரு தனியான சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

அதிகாரப் பகிர்வு மற்றும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு – கிழக்கு என்று பிரித்துப் பேச முடியாது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினர் சுட்டிக்காட்டினர். அதனை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்கு அமைவாக கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து நாளை 11 ஆம் திகதி பொதுப்பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப்பாக காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல் தொடர்பிலும், மறுநாள் 12ஆம் திகதி அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் பேச இணக்கம் காணப்பட்டது.

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் திட்டவரைவு தயாரில்லாததால் வடக்கு அபிவிருத்தி தொடர்பில் 13ஆம் திகதி பேசுவதில்லை என்றும், கிழக்கு அபிவிருத்தி தொடர்பான திட்டவரைவு தயாராகிய பின்னர் இரு மாகாணங்களையும் இணைத்துப் பேசுவது என்றும் நேற்று முடிவு செய்யப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான முழு விவரங்களையும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கு எடுத்துரைத்துள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நேற்று மாலை ஜனாதிபதியுடன் முதலில் சந்திப்பு நடந்தது. வடக்கு – கிழக்கில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்பேசும் மக்கள். எந்த விடயம் என்றாலும் வடக்கு – கிழக்கைப் பிரித்து உங்களின் செயற்றிட்டங்களை முன்னெடுக்க இடமளிக்கமாட்டோம். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் வடக்கு – கிழக்கின் தனியலகு தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் தீர்வு முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ளவேண்டும். வடக்கு – கிழக்கைப் பிரித்து பேச்சு நடத்த விரும்பினால் எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அதில் பங்கேற்கமாட்டோம் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.

எமது கருத்துக்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். வடக்கு – கிழக்கை இணைத்துத்தான் அனைத்துப் பேச்சுக்களையும் முன்னெடுப்போம் என்று ஜனாதிபதி பதிலளித்தார்.

ஜனாதிபதியுடனான பேச்சு முடிவடைந்த பின்னர் இந்தியத் தூதரகத்துக்கு நான், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சென்றோம்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் விரிவாக எடுத்துரைத்தோம்.

வடக்கு – கிழக்கைப் பிரித்து அரசு மேற்கொள்ளும் எந்த வேலைத்திட்டத்தையும் ஆதரிக்கோம் என்பதை ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறியுள்ளோம் என்பதை இந்தியத் தூதுவருக்கு விசேடமாக சுட்டிக்காட்டினோம்.

இந்தியா எமது அயல்நாடு. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தீர்வு விடயம் தொடர்பிலும் அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்துவரும் நாடு.

எனவே, இந்தியாவின் ஆலோசனைகளை நாங்கள் பெறுவோம். எமது பிரச்சினைகளையும் இந்தியாவுக்கு எடுத்துரைப்போம். அந்தவகையில்தான் இந்தியத் தூதுவரைச் சந்தித்தோம்." - என்றார்.