web log free
April 25, 2024

நாட்டுக்குள் அனுமதிக்குமாறு பிரபல அமைச்சர் பரிந்துரைத்த சீன பிரஜை ஒரு போதை பொருள் கடத்தல்காரர்

கடந்த 18ஆம் திகதி டுபாயில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சீன பிரஜைகள் இருவர் மற்றும் எகிப்திய பிரஜை ஒருவரும் இந்த நாட்டில் முதலீடு செய்ய வரும் வர்த்தகர்கள் என கூறி வந்துள்ளனர்.

இவர்களில் இருந்த லி பான் என்ற சீன நாட்டவர், ஆப்பிரிக்க நாடான கினியாவின் வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்கியதால் சர்ச்சைக்குரிய சூழல் உருவானது.

சந்தேகத்திற்கு இடமான வகையில், அவரது மற்ற ஆவணங்களை சோதனையிட்ட குடிவரவு அதிகாரிகள், அவரிடம் சீன கடவுச்சீட்டையும் கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு சீன நபர் வன்முறையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, குறித்த நபரை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு கோரி குடிவரவு குடியகழ்வு திணைக்கள கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

பின்னர், அந்த சீன பிரஜை நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்பு கிடைத்தது, ஆனால் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் உத்தரவின்படி, சீன பிரஜை குடிவரவு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அந்த விசாரணைகளின் பின்னர் கடந்த 23ஆம் திகதி குறித்த சீன பிரஜையை இலங்கையில் இருந்து நாடு கடத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், சீனாவுக்கு நாடு கடத்தப்படக் கூடாது என்று சீனப் பிரஜை தாக்கல் செய்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட இருந்ததால், அவர் அன்று நாடு கடத்தப்படாமல், குடிவரவுத் திணைக்களத்தால் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, லீ பே என்ற இந்த சீனப் பிரஜைக்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இது போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தம்மை அடித்து காயப்படுத்தியதாக சீன பிரஜை தனது மனுவில் கூறியிருந்த நிலையில், அந்த காயங்கள் தானே ஏற்படுத்தியவை என சட்ட வைத்திய அதிகாரியிடம் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

தன்னை சீனாவுக்கு நாடு கடத்துவதை விட துபாய்க்கு நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் லீ பான் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும் மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, மனுவை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதேவேளை, லீ பானை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பில் இந்த நாட்டில் உள்ள சீன தூதரகத்துடன் கலந்துரையாடி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.