web log free
April 26, 2024

பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு

அண்மையில், மத நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

மதக்கலவரத்தை ஏற்படுத்தி நாட்டின் அமைதியான சூழலை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு நோக்கங்களைக் கொண்ட குழுக்கள் மீது பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதை இது காட்டுகிறது.

தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், கடந்த காலத்தில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள முயற்சிக்கும் போது, நாட்டில் மற்றுமொரு நெருக்கடியை உருவாக்க பல்வேறு குழுக்கள் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

எனவே, எந்தவொரு தனிநபரோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுவோ இவ்வாறு குறுகிய நோக்கத்துடன் செயற்பட முற்பட்டால், அரசியலமைப்பின் 9வது அத்தியாயம் மற்றும் 291 (ஏ), (பி) ஆகியவற்றின் பிரகாரம் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த தயங்கமாட்டோம் என இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.