web log free
May 02, 2024

ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

நாளை (26) ஆரம்பமாகும் வாரத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களையும் கொழும்பில் தங்கியிருக்குமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகம் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாட்ஸ்அப் செய்தி மூலம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

ஆனால், அதற்கான காரணம் குறித்து அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

கடன் மறுசீரமைப்பு பிரேரணை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ள நிலையில், அரசாங்க அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் கொழும்பில் தங்கியிருக்குமாறு கூறப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த பிரேரணையை அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டியுள்ளதாக கருதி, எதிர்வரும் சனிக்கிழமை (01) பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக அதே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஆளும் கட்சியின் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இவ்வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை நாட்டுக்கு வந்தவுடன், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி (புதன்கிழமை) இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.