web log free
October 18, 2024

சில மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு

சமனலேவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்துவிடப்பட்டால் ஐந்து (05) மாவட்டங்களில் நான்கு மணிநேர மின்வெட்டு ஏற்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இங்கு நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் விட முடியும் என்று அமைச்சர் கூறினார்.

அவ்வாறு செய்தால் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, மின்வெட்டு இன்றி திறந்துவிடக்கூடிய அதிகபட்ச நீரை தொடர்ந்தும் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இரண்டு மணித்தியால மின்வெட்டை தாங்கிக்கொண்டு விவசாயத்திற்கு தேவையான நீரை விடுவிப்பது தற்போது அத்தியாவசியமான விடயம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யாவிடின் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அமரவீர தெரிவித்தார்.