web log free
September 08, 2024

வேன் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்வு

தம்புத்தேகம எரியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

இன்று (ஆகஸ்ட் 04) அதிகாலை குருநாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வேனுடன் பின்னோக்கி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வேனுக்குள் இருந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எவ்வாறாயினும், 36, 43 மற்றும் 46 வயதுடைய இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 55 வயதுடைய நபரும் உயிரிழந்துள்ளதோடு, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

காயமடைந்தவர்களில் 06 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 8 வயது சிறுமியும் அடங்குகின்றனர்.

வேன் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். அதிவேகமாக வாகனம் செலுத்திய போது கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, லொறியின் சாரதி தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.