web log free
September 08, 2024

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை

போதைப்பொருள் சுற்றிவளைப்பிற்கு சென்றிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மதுவரி திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் பம்பலப்பிட்டி கரையோர வீதியில் நேற்று மாலை சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.

மதுவரி பரிசோதகரும் 7 அதிகாரிகளும் அடங்கிய குழுவொன்று இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்ததுடன், போலியான கொள்வனவாளர் ஒருவரை ஈடுபடுத்தி சந்தேகநபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே இவர்களின் திட்டமாக இருந்தது.

அவர்கள் போலி கொள்வனவாளர் ஊடாக 150 கிராம் ஹெரோயினை கொள்வனவு செய்துள்ளனர். இதன்போது, ஹெரோயினை விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், விற்பனையாளருடன் வந்திருந்த நபர் தப்பிச்சென்றதாக மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளர், மேலதிக மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க குறிப்பிட்டார்.

தப்பிச்சென்றவரை கைது செய்வதற்காக மதுவரி திணைக்கள அதிகாரிகளால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து தப்பியோடிய சந்தேகநபர், வௌ்ளவத்தையில் தான் பயணித்த காரை கைவிட்டு, முச்சக்கரவண்டியொன்றில் ஏறி தப்பியோடியுள்ளார்.

இதனிடையே, இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய மதுவரி அதிகாரிகள் நால்வரும் மீண்டும் தமது தலைமையகத்திற்கு சென்றுகொண்டிருந்த போது வௌ்ளவத்தையில் பொலிஸாரால் வீதித் தடைக்கு அருகில் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கிப் பிரயோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட, மதுவரி பரிசோதகருக்கு உரிய துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட நால்வரும் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த துப்பாக்கிப்பிரயோகம் தனிப்பட்ட காரணங்களுக்காகவா இடம்பெற்றது எனும் கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் இதன்போது நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

மதுவரி அதிகாரிகளின் சுற்றிவளைப்பு தொடர்பில் பொலிஸூக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அறிவித்தலை வழங்குவதற்கான சந்தர்ப்பத்திற்கு இடமளிக்காத வகையில், அதற்கு முன்னரே பொலிஸார் மதுவரி அதிகாரிகளை கைது செய்ததாக மதுவரி திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். இது, கடமையின்போது இடம்பெற்ற சட்டபூர்வமான துப்பாக்கிப்பிரயோகமெனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை வழங்கி விடுவித்தது.

வழக்கு மீண்டும் எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.