web log free
September 08, 2024

பாராளுமன்றத்தில் பாலியல் சேட்டை, அதிகாரி பணிநீக்கம்

பாராளுமன்ற பராமரிப்பு பிரிவில் இளம் அழகிய பணிப்பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி திருமதி குஷானி ரோஹணதீரவினால் சந்தேகநபருக்கு பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊழியர்கள் இதுவரையில் முன்வைத்த தகவல்களை கருத்திற்கொண்டு அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் ஹவுஸ் கீப்பிங் திணைக்களத்தில் சில இளம் அழகான பணிப்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் வெளியானதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளரால் மூவர் கொண்ட குழு ஒன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழு நியமிக்கப்பட்ட பின்னர், குழுவின் முன் தானாக முன்வந்து ஊழியர்கள் குழு ஒன்று ஆஜராகி, தங்களுக்கு நடந்த முறைகேடுகள் குறித்து பல விவரங்களை வெளிப்படுத்தினர். பணிப்பெண்கள் அளித்த தகவலைக் கருத்தில் கொண்டு சந்தேகநபர்  இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் பல அதிகாரிகள் பற்றிய தகவல்களை ஊழியர்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க விடாமல் பெண் ஊழியர்களை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குழு பல வழிகளில் அச்சுறுத்தும் பல சம்பவங்கள் தொடர்பிலும் நாடாளுமன்ற தலைவர்களுக்கு தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பாராளுமன்ற தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற மகளிர் மன்றமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது. அந்த மன்றத்தின் உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஏற்கனவே பல ஊழியர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார்.