web log free
September 08, 2024

காணி, பொலிஸ் அதிகாரம் மத்திய அரசிடமே இருக்க வேண்டும் – மாகாண இணைப்பு தத்துவம் நீக்கப்பட வேண்டும் – நசீர்

அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமும் அது தொடர்பான முஸ்லிம் சமுதாயம் சார்ந்த சில கண்ணோட்டங்களும் தொடர்பிலான அறிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் அஹமட் நஸீர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ளார்.
 
14 ஆகஸ்ட் 2023
கௌரவ ரணில் விக்கிரமசிங்க,
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி,
ஜனாதிபதி செயலகம்,
கொழும்பு 01
 
மேதகு சனாதிபதி அவர்களே,
 
அரசியலமைப்புக்கான 13 வது திருத்தமும் அது தொடர்பான முஸ்லிம் சமுதாயம் சார்ந்த சில கண்ணோட்டங்களும்
இலங்கை அரசியலமைப்புக்கு 1988 பெப்ரவரி 3 அன்று கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தத்தினை அமுல்படுத்துவது தொடர்பாகப் பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கோரியமைக்காக நாம் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றோம். இக்கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2023 ஆகஸ்ட் 15 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் (எஸ்எல்எம்சி) பிரதித் தலைவராக (1) அக்கட்சியின் வேட்பாளர்களில் இருந்து தற்போதைய பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட ஒரே உறுப்பினர் என்ற ரீதியிலும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்ட மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் சார்பாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பாகவும் நான் பின்வரும் விடயங்களைத் தங்களின் கவனத்திற்காக முன்வைக்க விரும்புகின்றேன்.
 
2) (அ) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களுடன் (சிங்களவர்கள் உட்பட) நடத்தப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்ட கலந்துரையாடலை நடத்தாமலும், 2023 ஆகஸ்ட் 15, செவ்வாயன்றோ அல்லது அதற்கு முன்னரோ சமர்ப்பிக்குமாறு காலக்கெடு வழங்கப்பட்டு சனாதிபதியினால் ஏற்கனவே கோரப்பட்ட அரசியல் கட்சிகளின் எழுத்திலான கருத்துக்களைப் பெறுவதற்குக் காத்திராமலும், 13 வது திருத்தம் தொடர்பாகப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு உட்பட்டுத் தான் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை அறிவித்து கௌரவ சனாதிபதி அவர்கள் 2023 ஆகஸ்ட் 09, புதன்கிழமையன்று ஏன் பாராளுமன்றத்தில் ஒரு விசேட கூற்றினை விடுத்தார் என்ற வினாவுக்கு விடை கோரிக் கரிசணை கொண்ட பிரசைகள் அவர்களின் சமர்ப்பணங்களை எம்மிடம் முன்வைத்துள்ளனர். எவ்வாறாயினும், 13வது திருத்தத்தினை அமுல்படுத்த முன்னர் தான் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் மற்றும் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக சனாதிபதி பாராளுமன்றத்தில் விடுத்த கூற்றுக்கு நாம் நன்றி தெரிவிக்க விரும்புகின்றோம்.
 
3) கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம்களே பாரிய இனத்துவ - சமயச் சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாரிய, தனித்த குடிமைச் சமுதாயமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வலிந்து இடம்பெயரச் செய்யப்பட்டதுடன் 1987 களில் தொடங்கி இவர்களில் ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்கள் விடுதலைப் புலிகளால் காவு கொள்ளப்பட்டுள்ளன. பல்லினங்களும் பல்சமயங்களும் மகிழ்வுடன் திளைத்திருந்த இலங்கையைத் துண்டாடி, வேறான தமிழ்த் தேசம் ஒன்றினை சிருஷ்டிக்க நாடிய விடுதலைப் புலிகளின் பிரிவினை முயற்சிக்குத் துணை போகாத ஒரே காரணத்தினாலயே, வட கிழக்கில் புலிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனச்சுத்திகரிப்புக்கு முஸ்லிம்கள் பலியாகினர் என்பதும் அவர்கள் வலிந்து இடம்பெயரச் செய்யப்பட்டனர் என்பதும் அவர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டன என்பதும் அவர்களின் சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டன என்பதும் நாடறிந்த உண்மையாகும். இலங்கை வாழ் முஸ்லிம் சமுதாயத்தினதும் சிங்களச் சமுதாயத்தினதும் சமமானதும் ஒப்புரவுமிக்கதுமான பங்கேற்பின்றி, 13 வது திருத்தத்தின் அமுல்படுத்தலின் மூலமோ அல்லது வேறு எதன் மூலமோ வட கிழக்கு மாகாண மக்களின் இருப்பியல் - இனத்துவப் பிரச்சினைகளுக்காகக் கொண்டுவரப்படும் எத்தீர்வும் ஒரு போதுமே நீடித்த நிலைபேறான ஒரு தீர்வாக அமையாது.
 
4) பாராளுமன்றத்தில் சனாதிபதி விடுத்த விசேட கூற்றில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் நாட்டின் நல்லிணக்கத்தினைப் பாதுகாப்பதே தனது குறிக்கோளாகும் எனக் குறிப்பிட்டதன் மூலமே 13 ஆம் திருத்தம் தொடர்பான தன் குறிப்புரையினை அவர் பூர்த்தி செய்தார் என்பது தொடர்பிலும் எம்மிடம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தம் தாய்த் திருநாட்டைத் துண்டாடுவதற்குத் துணை போகவில்லை என்ற ஒரே காரணத்திற்காகத் தம் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து, ஏதிலிகளாக, நட்டாற்றில் விடப்பட்ட முஸ்லிம் சமுதாயம் எதிர்நோக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளை எல்லாம் கிஞ்சித்தும் கருத்திற் கொள்ளாது புறக்கணித்து, ஒரு சமுதாயத்திற்கு மாத்திரமே பரிவுகாட்டும் இந்த அணுகுமுறை அதிர்ச்சிமிக்கதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் பாகுபாடுமிக்கதாகவும் நோக்கப்படுகின்றது. இந்த இரண்டு மாகாணங்களிலும் வாழும் அனைத்துச் சமுதாயங்களையும் அலைக்கழிக்கும் இனத்துவம் சார்ந்த சமயம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நின்று நிலைக்கும் தீர்வினைக் காண்பதற்கு, மூன்று சமுதாயங்களுக்கும் சமமானதும் சீரானதுமான அந்தஸ்தினை வழங்கும் பாகுபாடற்றதும் உரிய விதி முறைகள் அனைத்தையும் தழுவிச் செல்கின்றதுமான அணுகுமுறையினைக் கௌரவ சனாதிபதி அவர்கள் ஏற்று நடைமுறைப்படுத்துவது அவரின் தலையாய கடமை என எம்மிடம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
5) வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகாரம் பரவலாக்கப்படுவதை முஸ்லிம்கள் ஆதரிக்கின்றனர், ஆனால், குறிப்பாக, 13 ஆவது திருத்தம் ஏனையவற்றின் மத்தியில் திருத்தப்பட வேண்டும்.
 
(அ) மாகாணங்களை இணைப்பதற்கான தத்துவத்தினை அகற்றி அரசியலமைப்பின் உறுப்புரை 154அ(3) நீக்கப்பட வேண்டும்,
(ஆ) (i) மாகாண சபைகளின் 2/3 பெரும்பான்மைத் தீர்மானத்தின் ஒத்திசைவுடன் மாத்திரமே எந்த மாகாணத்திலும் அனைத்துக் காணி மற்றும் காணித் தீர்வுத் தத்துவங்கள் நிறைவேற்றப்படும் எனும் ஏற்பாட்டிற்கு உட்பட்டும் (ii) 1981 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் மாகாணத்தின் இனத்துவ - சமய மக்கள் தொகை விகிதாசாரத்தினை மீறாதிருத்தல் எனும் ஏற்பாட்டிற்கு உட்பட்டும் ‘காணி மற்றும் காணித் தீர்வுத் தத்துவங்களை முற்றுமுழுவதுமாக மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
 
(இ) சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்துப் பொலிஸ் அதிகாரங்களும் பிரத்தியேகமாக மத்திய அரசாங்கத்திடம் மாத்திரமே ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், எந்த ஒரு மாகாணத்திலும் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பாகச் சேவையாற்றும் ஆளணியினரின் ஆக்கவமைவு, 1981 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் மாகாணத்தின் இனத்துவ – சமய மக்கள் தொகையினைப் பிரதிபலிக்க வேண்டும்.
 
6) வட மாகாண சபை இயங்கிய காலத்தில் கருத்தில் கொள்ளத் தவறிய, அனைத்து வடக்கு முஸ்லிம்களினதும் மீள்குடியேற்றத்தினையும் அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும், மேலும் யுத்தத்தின் போது துரத்தியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளும் சொத்துக்களும் அவர்களிடமே மீள ஒப்படைக்கப்பட வேண்டும், முஸ்லிம்களுக்கெதிரான எவ்வடிவிலானதும் எவ்வகையிலானதுமான சகல பிரச்சாரங்களும் நிறுத்தப்பட வேண்டும், இரண்டு மாகாணங்களிலும், அதி விசேட அவசர சூழ்நிலைகளைத் தவிர, வேறு எச்சந்தர்ப்பங்களிலும் ஆயுதப் படைகளின் எண்ணிக்கையினையும் வகிபாத்திரத்தினையும் குறைக்க வேண்டும், உண்மையான கலந்தாலோசிப்புச் செயன்முறை மூலம் சகல இனத்துவ - சமயச் சமுதாயங்களின் மத்தியிலும் ஐக்கியத்தினையும் சமாதானத்தினையும் சௌஜன்யத்தினையும் நிலைநாட்ட வேண்டும்.
 
கிழக்கு மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் கிராமத்தவர்கள், குறிப்பாக எல்லைக் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் முற்றுமுழுவதும் விரட்டியடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் கிராமங்களுக்கு மீளத் திரும்ப வராமல் அவர்கள் தடுக்கப்படுகின்றனர். இந்த முஸ்லிம்கள் அவர்களின் சொந்தக் கிராமங்களிலேயே பூரணமாக மீளக் குடியேற்றப்பட வேண்டும்.
 
7) (அ) மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தியினை, குறிப்பாக முன்னுரிமைக்குரியவையாகக் கல்வி, விவசாய மற்றும் சுகாதார அபிவிருத்தியினை அடைந்து கொள்வதே மாகாண சபைகளின் பிரதான குறிக்கோள் என அவற்றுக்கு ஆணை வழங்கப்பட வேண்டும். மேலும், மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், ஒவ்வொரு மாகாணத்திற்குமெனப் பரவலாக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்கிற்கு விகிதாசாரமுடையவையாகப் பூரணமாகவும் உரிய நேரத்திலும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதை மத்திய அரசாங்கம் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது வற்புறுத்தப்பட வேண்டும்.
 
(b) மாகாணத்தின் செயற்திறன்மிக்க பொருளாதார அபிவிருத்திக்காக, மாகாண மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் சேகரிக்கப்படும் வரிகள் மற்றும் வீதவரிகள் உள்ளிட்ட அனைத்து வருமானத்தினதும் குறைந்தது 85%, சம்பந்தப்பட்ட மாகாணங்களினதும் உள்ளூராட்சி அதிகாரசபைகளினதும் திறைசேரிகளில் நியதிச்சட்ட ரீதியாகத் தொடர்ந்து வைத்திருக்கப்பட வேண்டும் என்பதுடன், இதில் 2/3, சம்பந்தப்பட்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகளினது அபிவிருத்திக்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகாரசபைகளால் ஒதுக்கப்பட வேண்டும், எஞ்சிய 1/3, மத்திய அரசாங்கத்தின் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் கணக்காய்வுக்கு உட்பட்டு, நாட்டின் பின்தங்கிய/அபிவிருத்தியடையாத பிரதேசங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.
 
எந்த மாகாணத்திற்கும் கிடைக்கும் சகல வெளிநாட்டு ஆதாரமும் உதவிகளும் அரசாங்கத்தின் ஒத்திசைவுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன், பாகுபாடின்மை மற்றும் சட்டத்தின் சமமான பாதுகாப்புப் போன்ற அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு உட்பட்டே அவை நிறைவேற்றப்பட வேண்டும்.
 
9) அரசியலமைப்பின் நன்கு நிலைபெற்ற 4, 5, மற்றும் 6 ஆம் ஏற்பாடுகளின் திருத்தம் போதிய அளவு விளக்கப்படவில்லை என்பதுடன் நியாயமான நியாயப்படுத்தல்கள் இன்றி அதற்கு ஆதரவு வழங்கப்பட முடியாது.
 
10) சர்ச்சைக்குரிய, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை இயற்றுவதென்பது முற்றுமுழுவதும் அவசியமற்றதாக உள்ளது. ஏனெனில், கொடிய பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தில் இருந்து நாம் கண்கூடாகக் கண்டதைப் போன்று, பயங்கரவாதத்தினைக் கட்டுப்படுத்துவதில் இது போன்ற சட்டங்கள் ஒரு போதுமே வெற்றியளிக்கவில்லை. நீதிமன்றங்கள் உள்ளிட்ட, தத்துவங்கள் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களினால் நாட்டின் நீதியான, நியாயமான மற்றும் பாகுபாடற்ற ஆளுகை மூலம் மாத்திரமே பயங்கரவாதத்தினை இல்லாதொழிக்க முடியும். இவ்வாறான சட்டங்கள் அதீத துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, சிறுபான்மையினரை நசுக்குவதற்காக அவை ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டு ஈற்றில் அது பாரிய அடிப்படைவாதத்திற்கு இட்டுச்சென்று நல்லிணக்கத்தினையும் சேதப்படுத்தியுள்ளது என்பதே உலகளாவிய நோக்காக இருக்கின்றது. நாடு அதன் பொருளாதார வங்குரோத்து நிலையில் இ்ருந்து மீண்டெழ வேண்டுமாயின், இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
 
உங்கள் உண்மையுள்ள
பொறி. அஹமட் நஸீர் அஹமட்,
பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்டம்,
பிரதித் தலைவர் (1) – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்