web log free
June 30, 2025

குறைகிறது மழை!

நாளை (2)  முதல் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென திணைக்களம் தெரிவித்தது.

எவ்வாறாயினும் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கடல்சார் ஊழியர்களுக்கும் மீனவர்களுக்கும் தொடர்ந்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பெய்த கடும் காற்றுடனான பலத்த மழையால் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 7,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

03 தற்காலிக முகாம்களில் 147 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, புத்தளம், கண்டி, நுவரெலியா, பதுளை, யாழ்ப்பாணம், மன்னார், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் மழையினால் அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

1,917 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மழையுடனான வானிலையால் 06 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது.

கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய 05 மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd