பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி மனிதாபிமான ரீதியில் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என தமிழரசுக் கட்சி எம்.பி. எஸ். சிறிதரன் சபையில் நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் சிறிதரன் எம்.பி கடந்த பாராளுமன்ற அமர்வில் எழுப்பிய தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான கேள்விக்கு நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நேற்று சபையில் பதிலளித்தார். அதன் போதே சிறிதரன் எம்.பி மீண்டும் அதனை வலியுறுத்தினார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல விடுத்துள்ளார்கள் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், இவ்விடயத்தில் தம்மால் எவ்வித உத்தரவாதமும் வழங்க முடியாது என்றும் ஜனாதிபதியே அதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
எனினும் சாதகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நிலையியற் கட்டளை 27 இன் இரண்டின் கீழ் தமிழரசுக் கட்சி எம்.பி. எஸ்.சிறிதரன் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் சந்தேக நபர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்கள் 4 பேர், விடுதலைப் புலிகள் அமைப்பின் 8 பேர், ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள 2 கைதிகள், 2 மரண தண்டனை கைதிகள் என நாட்டிலுள்ள வெலிக்கடை, மெகசின், மஹர, தும்பர, பூஸா மற்றும் நீர் கொழும்பு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் தமது தண்டனைக் காலம் நிறைவடைந்ததன் பின்னர் விடுதலையாவார்கள். அல்லது நீதிமன்றத்தின் ஊடாக பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள். அல்லது மேன்முறையீடு செய்தும் பிணையைப் பெற்றுக்கொள்ளலாம்.
சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் ஏற்பாடும் காணப்படுகிறது.
அந்த வகையில் தமிழ் அரசியல் கைதிகளில் சுமார் 15 பேர் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் சிலர் என்னை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்
இவ்விடயத்தில் என்னால் எந்த உத்தரவாதத்தையும் வழங்க முடியாது. ஏனெனில் அது நீதியமைச்சின் விடயதானத்துக்குள் உட்படாது. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுக்க வேண்டும். எனினும் சாதகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.