ஹர்த்தால் நாளை காலையில் மாத்திரம்! - தமிழரசுக் கட்சி அறிவிப்பு
வடக்கு, கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம் மற்றும் இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக நாளை ஹர்த்தால் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் எனவும், அது பலரின் நன்மை கருதி காலையில் மாத்திரம் நடைபெறும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"அரசாங்கப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராணுவப் பேச்சாளரும் பொலிஸ் பேச்சாளரும் இருந்தனர். நாளை வடக்கு, கிழக்கில் நாம் நடத்தும் ஹர்த்தால் தொடர்பிலேயே இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது.
அதில் அவர்கள் விசேடமாகக் கூறிய விடயங்களுக்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதில் அமைச்சர் கூறுகின்றார், "இது தமிழர்களுக்கு எதிரான விடயம் அல்ல. இப்படியான சம்பவம் எந்தப் பகுதியில் இடம்பெற்றாலும் நடவடிக்கை எடுக்கின்றோம். அதற்கு ஹர்த்தால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை" - எனச் சொல்கின்றார்.
ஆனால் வடக்கு, கிழக்கைப் போன்று நாட்டின் எப் பகுதியிலும் மக்கள் மத்தியில் இராணுவப் பிரசன்னம் கிடையாது. நாங்கள் இந்தக் ஹர்த்தால் மூலம் வெளிக்கொணர இருக்கும் முக்கிய விடயம் என்னவெனில் சாதாரண மக்களுடைய வாழ்க்கையில் இடையூறு செய்யும் விதமாகவே இந்த இராணுவ மயமாக்கல் இடம்பெறுகின்றது என்பதனை நாம் தொடர்ச்சியாகக் கடந்த 16 வருடங்கள் சொல்லி வருகின்றோம்.
அனுமதியின்றி சிலர் இராணுவ முகாமுக்குள் நுழைந்தார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களை விரட்டியடிக்க நடவடிக்கை எடுத்தபோது ஒருவர் நீரில் மூழ்கி இறந்து விட்டார் என்றும், மரண விசாரணை முடியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். நீதிமன்ற நடவடிக்கை இருக்கும்போது நீரில் மூழ்கி மரணம் எனக் கூற முடியாது.
இதேதேரம் பொலிஸ் பேச்சாளரின் தகவலின்படியே ஒரு இராணுவ வீரர் இந்த ஐந்து பேரையும் தாக்கிக் காயப்படுத்தினார் என்ற காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டதாகவும் கூறுகின்றார். உயிரிழந்த இளைஞர் தாக்கி மரணமடைந்தாரா, தாக்கியதால் குளத்தில் பாய்ந்தாரா போன்ற விடயங்கள் எல்லாம் வெளிவர வேண்டும். இதேநேரம் ஏனைய இரு இராணுவத்தினரும் மேற்படி ஐவரையும் அழைத்து வந்தவர்கள் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் சொல்கின்றார்.
அப்படியானால் இராணுவ வீர்ர்களே அவர்களை உள்ளே அழைத்து வந்திருந்தால் இது எப்படி அனுமதியற்ற நுழைவு எனச் சொல்ல முடியும் என ஊடகவியலாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு உரிய பதில் கொடுக்கப்படவில்லை.
அமைச்சர் நாம் வேறுபாடு காட்டுவதில்லை என்கின்றார். ஆனால், நான் மீண்டும் கூறுகின்றேன். இது வடக்கு, கிழக்கில் மட்டும் காணும் விடயம். இதேநேரம் அமைச்சர் இன்னும் ஒன்றைக் கூறுகின்றார் அவர்கள் சேர்ந்து வாழப் பழகிவிட்டனர், அவர்களிடத்தில் நல்ல உறவு உள்ளது என்கின்றார். இது இராணுவமயமாக்கலின் சிறிய உதாரணம். இராணுவம் வாழும் சூழலை இராணுவத்தை அண்டி வாழும் சூழலை ஏற்படுத்துகின்றனர் என்பதனைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தவே இந்தக் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
எவருக்கும் தடங்கல் ஏற்படுத்தவோ, அவர்களைச் சிரமப்படுத்தவோ இந்தக் ஹர்த்தாலைச் செய்யவில்லை. இது தொடர்பான அரச ஊடக சந்திப்பில் இராணுவப் பேச்சாளர் ஒன்றையும், பொலிஸ் பேச்சாளர் ஒன்றையும் கூறுகின்றனர். அமைச்சர் வேறு ஒன்றைக் கூறுகின்றார் இதை வெளிப்படுத்தியே ஹர்த்தால் இடம்பெறுகின்றது என்பதனை வடக்கு, கிழக்கு மக்களுக்கும் விசேடமாக வர்த்தக உரிமையாளர்களுக்கும் எடுத்துச் சொல்ல விரும்புகின்றோம்.
இதேநேரம் பலரின் கோரிக்கையின் பெயரில் ஹர்த்தாலை முழுமையாகப் பேணும் அதேநேரம், இதைப் பலரின் நன்மை கருதி காலையுடன் மட்டும் முடித்துகொள்ளலாம். ஏனெனில் யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தன் ஆலய உற்சவம் மாலையில் இடம்பெறுவதும் கருத்தில்கொள்ளப்பட்டு இந்த முடிவு எட்டப்படுகின்றது." - என்றார்.