பாணந்துறை, வந்துரமுல்ல, அலு போகஹவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்ததாக சந்தேகிக்கப்படும் 2 அடையாளம் தெரியாத நபர்கள் வீடொன்றிற்குள் நுழைந்த அங்கிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் 55 வயதுடைய, அலு போகஹவத்த பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் இதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தொடர்பான தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட நபர், தற்போது இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினரான பாணந்துறை நிலங்க என்பவரின் மாமனார் என தெரிவிக்கப்படுகிறது.
பாணந்துறை சலிந்து எனும் பாதாளக் குழு உறுப்பினரின் வழிகாட்டலின் பேரில் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


