இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (16) உத்தரவிட்டார்.
சந்தேகநபரை தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.
சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
573 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் இல. 23 (அ) (1) பிரிவின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுடன் தொடர்புடையதாக இந்த கைது இடம்பெற்றிருந்தது.
விளையாட்டு அமைச்சு, தனியார் போக்குவரத்து அமைச்சு மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சு ஆகியவற்றின் அமைச்சராகப் பதவி வகித்த சீ.பி ரத்நாயக்க இன்று (16) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


