web log free
December 22, 2025

அனர்த்த நிவாரணப் பொதி முழு விபரம் அறிவிப்பு

அவசர அனர்த்த சூழ்நிலை முடிந்த பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்ய ரூ. 25,000 வழங்குதல். இந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் இங்கு ஒரு சிக்கல் இருப்பதை நான் அறிவேன். இது கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொகையின்படி, கிட்டத்தட்ட 65% வழங்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில், 90% மற்றும் 100% வழங்கப்பட்ட இடங்கள் உள்ளன.

மேலும் நாங்கள் கூடுதலாக 50,000 ரூபாயை வழங்குகிறோம். வீடு சேதமடைந்திருந்தால், தளபாடங்கள் சேதமடைந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சமையலறை உபகரணங்களைப் பெறுவதற்கு அந்த உதவித் தொகையை நாங்கள் வழங்குகிறோம். எந்த அரசாங்கமும் இந்த வழியில் செயல்படவில்லை. நாங்கள் இதை கொள்கை அடிப்படையில் வழங்குகிறோம்.

தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, 6228 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. பகுதியளவு சேதமடைந்துள்ள NBRO அனுமதி வழங்காத 4543 வீடுகள் உள்ளன. சேதமடையாத ஆனால் NBRO அனுமதி வழங்காத 6877 வீடுகள் உள்ளன. அதாவது மொத்தம் 17,648 வீடுகள். நாம் முதலாவதாக இந்த 17,648 பேருக்கு ஜனவரி மாதம் முதல் 03 மாதங்கள் வரை ரூ. 50,000 உதவித்தொகை வழங்குவோம்.

பாதுகாப்பு முகாமில் வசிப்பது எவ்வளவு கடினமானது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, அவர்கள் மிக விரைவில் அந்த இடங்களிலிருந்து அகற்றப்பட்டு, வீட்டிற்குச் செல்ல நான் முன்னர் குறிப்பிட்ட 03 வகைகளின்படி ரூ. 25,000 வீட்டு வாடகை வழங்குவதே எங்கள் எதிர்பார்ப்பு. அவர்களின் உறவினர்கள் வீட்டில் இருந்தால், அவர்களுக்கு ரூ. 25,000 வழங்குவோம்.

பயிர்ச்செய்கை நிவாரணங்கள்

நெல், சோளம், முந்திரி மற்றும் தானியங்களை பயிரிட்டிருந்தால், ஹெக்டேருக்கு 150,000 ரூபாய் உதவித்தொகை வழங்க முடிவு செய்துள்ளோம்.

மிளகாய், வெங்காயம், பப்பாளி மற்றும் வாழை மரங்களை பயிரிட்டவர்களை காய்கறி பிரிவில் சேர்த்து, அவர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.200,000 வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்றுமதி விவசாயத் தரப்பிலிருந்து பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்படி, மிளகு, ஏலக்காய் மற்றும் கோபி தோட்டங்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து தரவுகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம். அந்தத் தரவுகளின் அடிப்படையில், ஒரு மிளகுச் செடிக்கு ரூ. 250 செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் புதிய செடிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

கால்நடை வளர்ப்புக்கு அளவீடு இல்லை. நிறைய பன்முகத்தன்மை உள்ளது. நாம் கால்நடை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்படாத கால்நடை வளர்ப்பு பற்றி நாம் தனியாக சிந்திக்க வேண்டும். முதல் கட்டமாக, பதிவு செய்யப்பட்டவற்றுக்கான திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.

ஒரு கலப்பின மாடு தொலைந்தால், இரண்டு இலட்சம் ரூபாய் உதவி வழங்கப்படும். அதிகபட்சம் 10 மாடுகளுக்கு 20 இலட்சம் ரூபாய் உதவி வழங்கப்படும். கலப்பினமற்ற ஒவ்வொரு உள்ளூர் மாட்டுக்கும் 50,000 ரூபாய் உதவி வழங்கப்படும்.

அதிகபட்சமாக 20 மாடுகளுக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்படும். கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு விவசாயியின் முக்கிய நோக்கமும் கால்நடை அலுவலகத்தில் பதிவு செய்வதாக இருக்க வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் ஒவ்வொரு 6
மாதங்களுக்கு ஒரு முறையேனும் தங்களிடம் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும். பதிவு செய்யப்படாத பண்ணைக்கு கால்நடை சேவைகள் வழங்கப்பட்டால், கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

இனிமேல், சேவைகளை இலவசமாக வழங்க முடியாது. பதிவு செய்யப்படாத விவசாயிகள் மாகாணத்திலிருந்து மாகாணத்திற்கு விலங்குகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, பதிவு அவசியம். இருப்பினும், பன்றிகள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் ஆகிய மூன்று வகையான விலங்குகளில் ஒன்று காணாமல் போனால் ரூ. 20,000, வீதம் அதிகபட்சம் 20 விலங்குகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கால்நடை வளர்ப்பை மீண்டும் கட்டியெழுப்ப இதுபோன்ற திட்டங்களை நாங்கள் தயாரித்துள்ளோம்.

அடுத்து, கோழி வளர்ப்பில் பல வேறுபாடுகள் உள்ளன. இறந்த ஒரு லேயர் கோழிக்கும் ரூ. 500 வீதம் 2,000 கோழி வரை உதவி வழங்கப்படும். அதன்போது, 2,000 கோழிகள் இழந்தால், ஒரு மில்லியன் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு பிராய்லர் கோழிக்கும் ரூ. 250 வீதம் , அதிகபட்சம் 4,000 கோழிகள் வரை உதவி வழங்கப்படும். விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கோழிகளை வழங்கிய வீட்டுக் கோழி பண்ணைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவர்களுக்கு ரூ. 10,000 உதவி வழங்க முடிவு செய்துள்ளோம். மாகாண சபையிடமிருந்தும் நீங்கள் இலவசமாக குஞ்சுகளைப் பெறலாம்.

மீன்பிடித் தொழிலில் பல சிக்கல்கள் உள்ளன. கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்கள் படகுகளுக்கு காப்புறுதி செய்யாமல் தொழிலில் ஈடுபட முடியாது. அவர்களின் படகுகளுக்கு காப்புறுதி இருந்தால் மட்டுமே மீன்வள அமைச்சு மீன்பிடி அனுமதி பத்திரங்களை வழங்கும். கடலில் மீன் பிடிக்கும் அனைவருக்கும் காப்புறுதி உள்ளது. காப்புறுதியில் இருந்து இழப்பீடு பெற்றாலும், புதிய படகு வாங்க காப்புறுதித் தொகை போதுமானதாக இல்லை. காப்புறுதியில் இருந்து கிடைக்கும் பணத்தை சினோர் நிறுவனத்திற்கு வழங்கவும், சினோர் நிறுவனம் மூலம் ஒரு புதிய படகை வழங்க நாம் தீர்மானித்துள்ளோம் .

வலை உட்பட உபகரணங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கான வவுச்சரை நாங்கள் வழங்குகிறோம். அந்த வவுச்சரை சினோர் நிறுவனத்திடம் கொடுத்த பிறகு, நீங்கள் வலை உட்பட உபகரணங்களைப் பெறலாம். மீன்பிடித் தொழிலை மீண்டும் மேம்படுத்த வேண்டும். மேலும், சினோர் நிறுவனம் சிறிது சேதமடைந்த படகுகளை இலவசமாக பழுதுபார்த்து தரும்.

மேலும், நன்னீர் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தப்படும் ஒரு படகுக்கு ரூ. 100,000 தொகையும், மீன்பிடி சங்கம் மூலம் ஒரு வலைக்கு ரூ. 15,000 வீதம், அதிகபட்சம் ஐந்து

வலைகளுக்கு 75,000 ரூபாய் வழங்கப்படும். சில குளங்களில் உள்ள மீன் குஞ்சுகளில் சுமார் 35% நீரில் மூழ்கிவிட்டன. சில குளங்களில் அனைத்து மீன் குஞ்சுகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சேதமடைந்த நீர்த்தேக்கங்களுக்கு மீன்வள அமைச்சு இரண்டு சந்தர்ப்பங்களில் மீன் குஞ்சுகளை வழங்கும்.

பாடசாலை மாணவர்களுக்கு

ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ.10,000 மற்றும் திறைசேரியிலிருந்து ரூ.15,000 வழங்கப்படும். புதிய பாடசாலை தவணை
தொடங்குவதற்கு முன்பு பாடசாலை மாணவர்களுக்கு இந்த உதவித்தொகையை வழங்க முயற்சி.

அனர்த்தத்தால் சேதமடைந்த வர்த்தகங்களை கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது, அதன்படி, தனியுரிமை நிறுவனங்கள், சிறு வணிகங்கள் மற்றும் நுண் நிறுவனங்கள் என்று 9,600 வர்த்தகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொழில்களை மீண்டும் மீட்டெடுக்க இந்த 9,600 வணிகங்களுக்கும் தலா ரூ. 200,000 வழங்க முடிவு செய்துள்ளோம்.

வர்த்தகக் கட்டிடங்களுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. பகுதியளவு சேதமடைந்த வர்த்தக இடத்திற்கு ஆரம்பத் தொகையாக ரூ. 05 இலட்சம் வழங்கப்படும். அது போதாது என்றால், மதிப்பீடு செய்யப்பட்டு அதிகபட்சமாக ரூ. 50 இலட்சம் வழங்கப்படும். அவர்களுக்கு ஏற்பட்ட சேதம் ரூ. 500,000 க்கு மேல் இருந்தால், ரூ. 500,000 உதவியைப் பெற்று மதிப்பிட முடியாது. அடுத்து, கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யாத, பிரதேச செயலகங்களிலிருந்து வர்த்தக உரிமங்களைப் பெற்ற ஏராளமான சிறு வணிகர்கள் உள்ளனர். ஆனால் தரவு இன்னும் சேகரிக்கப்படவில்லை. எனவே, தரவுகளைச் சேகரிக்காமல் இன்னும் ஒரு முடிவை எடுக்க முடியாது.

ஆனால் கடையில் உள்ள அனைத்து பொருட்களும் அழிக்கப்பட்டால், வணிகத்தை மீண்டும் தொடங்க அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும். அதற்கான தரவு இல்லாததால், மாவட்ட செயலாளர்கள் மூலம் பிரதேசத்தில் உள்ள வர்த்தக இடங்கள் குறித்த அறிக்கையைப் பெற்று, உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இறால் வளர்ப்பு போன்ற விலையுயர்ந்த பெரிய அளவிலான வணிகங்களுக்கு சலுகை கடன்களை வழங்க முடிவு செய்துள்ளோம். சிறு அளவிலான வணிகங்களுக்கு ரூ. 2.5 இலட்சம் முதல் 10 இலட்சம்

வரையும் பாரிய அளவிலான வணிகங்களுக்கு அதிகபட்சம் ரூ. 250 இலட்சம் வரை கடன்கள் வழங்கப்படும். அரசாங்கம் கடன்களுக்கு வட்டி வசூலிப்பதில்லை.

நாங்கள் வங்கிகளுக்கு பணம் வழங்குகிறோம், மேலும் வங்கிகள் மூலம் கடன் திட்டங்களை செயல்படுத்துகிறோம். கடன் திட்டங்களை செயல்படுத்துவதில் சில நிர்வாக செலவுகள் உள்ளன. அந்த செலவை ஈடுகட்ட வங்கி ஒரு சிறிய வட்டியை வசூலிக்கிறது. கடனைப் பெற்ற பிறகு, ஆறு மாதங்களுக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே எங்கள் நோக்கம். அவர்களின் வாழ்க்கையை நாங்கள் கைவிட முடியாது. அனுமதி அற்ற நிர்மாணங்களை அகற்றுவதே எங்கள் நோக்கம்.

இந்த உதவியை வழங்குவதற்கு நமக்கு ஒரு காலக்கெடு தேவை. இது இன்று நிறைவேற்றப்பட்டாலும், திங்கட்கிழமை பணத்தைப் பற்றி கேட்க வேண்டாம். இந்த செயல்முறைகள் பிரதேச செயலகங்களில் நடைபெறுகின்றன. உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க வழிகள் உள்ளன. உண்மையில், இதையெல்லாம் மக்களுக்கு வழங்க, எதிர்க்கட்சியின் ஆதரவும் தேவை. மக்கள் உதவி பெறவில்லை என்றால், இன்னும் இரண்டு மாதங்களுக்கு வீடு வீடாகச் செல்லுங்கள். இப்போதே அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்திற்குச் செல்லுங்கள்.

நாங்கள் இதை படிப்படியாகத் தொடங்குகிறோம். முன்னர் குறிப்பிட்டபடி, மண்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 17,648 குடும்பங்களுக்கு இந்த 50 இலட்சம் ரூபாய் உதவித்தொகையை வழங்குகிறோம். அவர்கள் அனைவரும் ஆபத்தான இடங்களிலிருந்து அகற்றப்படுவார்கள். 2027 ஆம் ஆண்டுக்குள், அதிக ஆபத்தான இடங்களில் எந்த குடும்பமும் வசிக்க முடியாத வகையில் சட்டங்கள் இயற்றப்படும். மேலும், வீடுகள் முழுமையாக சேதமடைந்தால், குருநாகல் போன்ற பகுதிகளில் குடியேற பொருத்தமான காணி உள்ளவர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

வீடுகள் கட்டுவதற்காக அரச நிலங்களை கையகப்படுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். இந்த மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப ரூ. 500 பில்லியன் குறைநிரப்பு பிரேரணயை நாங்கள் முன்வைத்துள்ளோம். இயற்கை பேரழிவுகளைத் தடுக்க முடியாது என்றாலும், இதுபோன்ற இயற்கை பேரழிவுகளால் ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுக்க ஒரு நீண்டகால திட்டம் தேவை. மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நீண்டகால திட்டம்

தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். எனவே, பல முறையான நடவடிக்கைகள் மூலம் நாங்கள் இதில் பிரவேசித்துள்ளோம்.

சேதமடைந்த வீதிக் கட்டமைப்பு, மின்சார கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல் கட்டமைப்பை சீர்செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். மின்சார கட்டமைப்பை மீட்டெடுக்கும் போது ஒரு தொழிலாளி இறந்தார். அடுத்த இலக்கு அனைத்து பாடசாலைகளையும் திறப்பது. ஒரு அரசாங்கமாக எங்கள் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்வதில் எங்களுக்கு திருப்தி இருக்கிறது. இந்த நாட்டை மீட்டெடுக்கும் பொறுப்பை நாங்கள் மிகவும் திட்டமிட்ட முறையில் நிறைவேற்றுகிறோம். நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

இன்று (19) பாராளுமன்றில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-12-19

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd