– மத்திய வங்கி அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி (CBSL) அவசர நிலை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து கடனாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கடன் வசதிகளுக்கான அபராத வட்டி மற்றும் தொடர்புடைய கட்டணங்களை இடைநிறுத்துமாறு உரிமம் பெற்ற வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிவாரண காலம் 2026 ஜனவரி 31 வரை அமலிலிருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, காசோலை திருப்பி அனுப்புதல், கட்டண நிறுத்தம், தாமத கட்டணங்கள், கடன் மறுசீரமைப்பு அல்லது மாற்றத்திற்கான கட்டணங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து கடனாளர்களின் கடன் வசதிகளுக்கான அபராத வட்டி கட்டணங்கள் இடைநிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி சங்கம் (SLBA) முன்வைத்த பரிந்துரைகளை பரிசீலித்த பின்னர், சமீபகால சூறாவளி மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட எதிர்மறை பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், கடன் மறுசீரமைப்பு அல்லது மீள் கால அட்டவணை செய்வதற்கு முன், அதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள், முதன்முதல்தொகை, வட்டி மற்றும் பிற கட்டணங்களின் முழுமையான விவரங்களை கடனாளருக்கு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், கடனாளரின் சம்மதம் எழுத்து மூலமாகவோ அல்லது மின்னணு முறையிலோ பெறப்பட வேண்டும். கோரப்பட்ட நிவாரணம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணங்களை குறிப்பிட்டு வங்கி எழுத்து மூலம் கடனாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாறு நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், கடனாளர் இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் துறையின் இயக்குநரிடம் முறையீடு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


