தனக்கும் தனது மகனுக்கும் வாக்குமூலம் பெறுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது முழுமையாக ஒரு குடும்பத்தை இலக்காகக் கொண்ட அரசியல் பழிவாங்கல் என்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
போலீசின் உத்தரவின் பேரில் இன்று (05) காலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) முன்னிலையில் ஆஜரான சந்தர்ப்பத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அழைப்பை புறக்கணித்தால் கைது செய்வதற்காக நீதிமன்ற பிடியாணை பெறப்படும் என போலீசார் எச்சரித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தன்னை ஏன் அழைத்தனர் என்பது குறித்து எவ்வித காரணமும் அறிவிக்கப்படவில்லை என்றும், FCID தமக்கு புதிதான இடமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,
“இது எனக்கு புதிய இடமல்ல. இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல். ஒரு முழு குடும்பத்தையே சிறையில் அடைக்க முயற்சிக்கிறார்கள். எந்த ஆதாரமும் இல்லாமல், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு வழக்கில் என் பிள்ளைகளை முதலில் கைது செய்து, பின்னர் என்னையும் கைது செய்யும் திட்டம் இது. அரசாங்கம் இதற்காக இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து அவதூறு செய்கிறது. நான் எந்த தவறும் செய்யவில்லை. என் பிள்ளைகளும் எந்த தவறும் செய்யவில்லை. எனவே இதை நாங்கள் தைரியமாக எதிர்கொள்வோம்,”
என்று அவர் கூறினார்.
மேலும், இந்த விடயத்தில் தாம் அச்சமடையவில்லை என்றும், நீதியும் நியாயமும் நிலைநிறுத்தப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சதொச (SATHOSA) நிறுவனத்திற்குச் சொந்தமான லாரி வாகனத்தை தவறாக பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும், மேலும் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்குடன் தொடர்புடையதாக, சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து மேலாளரான இந்திக ரத்னமல்ல என்பவர் நேற்று (04) கைது செய்யப்பட்டார்.
முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் பதவியில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இருந்த காலப்பகுதியில், சதொச நிறுவனத்தின் லாரி ஒன்றை ஒரு எத்தனால் நிறுவனத்தின் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்காக, அவரது மகன் ஜோஹான் பெர்னாண்டோவுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திக ரத்னமல்ல வத்தளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், வரும் ஜனவரி 09ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய ஐந்து விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்த போதும், அவர் இருந்த இடத்தை கண்டறிய போலீசாரால் முடியாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


