நுகர்வோர் விவகார ஆணையத்தின் பிரதான அலுவலக விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது, கட்டுப்படுத்தப்பட்ட விலையை விட அதிக விலையில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சோதனையின் போது, ரூபாய் 70 என்ற கட்டுப்படுத்தப்பட்ட விலை நிர்ணயிக்கப்பட்ட 500 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில்கள் 4, ரூபாய் 90 மற்றும் ரூபாய் 100 என்ற அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கொழும்பு பகுதியிலுள்ள பிரபல வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு, கொழும்பு மேலதிக மகிஸ்திரேட் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன அவர்களால் ரூபாய் 5 இலட்சம் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டது.
2003 ஆம் ஆண்டு இலக்கம் 09 கொண்ட நுகர்வோர் விவகார ஆணையச் சட்டத்தின் 20(5) மற்றும் 68 ஆகிய பிரிவுகளின் கீழும், 2021 ஆம் ஆண்டு இலக்கம் 20 கொண்ட திருத்தச் சட்டத்தின் 60(4A) பிரிவின் கீழும் குறித்த சந்தேகநபர் குற்றம் செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
கட்டுப்படுத்தப்பட்ட விலையை விட அதிக விலையில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வதைத் தடைசெய்து அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி விற்பனை நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதால், இவ்வாறான வர்த்தக நிலையங்கள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


