மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்படவோ அல்லது விலைகள் பெரிதாக உயர்வதற்கோ காரணம் எதுவும் இல்லை என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ஒரு கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
எனினும் கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் காப்பீட்டு கட்டணங்களில் ஏற்பட்டுள்ள சிறிய உயர்வு மற்றும் ஆர்டர்களில் ஏற்பட்டுள்ள குறுகிய தாமதங்கள் காரணமாக தற்போது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் சுமார் 5% முதல் 10% வரை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் பண்டிகை காலத்திற்காக பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பொருட்களின் பெரும்பாலானவை இந்தியா வழியாக வருவதால் உணவுப் பொருட்களின் கிடைப்பில் அல்லது விலைகளில் பெரிய மாற்றம் ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனால், பண்டிகை காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விநியோகம் அல்லது விலைகள் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அவர் வலியுறுத்தினார்.




