ஈஸ்டர் தாக்குதல் ஏதேனும் சதித் திட்டத்தின் விளைவாக நடந்ததா என்பதை ஆராய்வதற்காக இரண்டாவது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை சுமார் ஒரு ஆண்டுக்காலம் நடத்தப்பட்டு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் இராணுவ புலனாய்வு தலைவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் படி, முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் இருந்திருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஆனந்த விஜேபால மேலும் வெளிப்படுத்தினார்.
அதேவேளை, சுரேஷ் சலே தற்போது ஒரு சந்தேக நபராக மட்டுமே கருதப்படுகிறார் என்றும் அவர் குற்றவாளியா அல்லது குற்றமற்றவரா என்பதை எதிர்காலத்தில் நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.




