உலக சந்தையில் நிலவும் அசாதாரண நிலைமைகளை முன்னிட்டு, இலங்கையில் எரிபொருள் விலை இந்த மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் மீண்டும் உயரக்கூடும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர்நிலை காரணமாக எரிபொருள் இறக்குமதி செலவுகள் அதிகரித்திருப்பது இதற்கு முக்கிய காரணமாகும்.
உலக சந்தையில் மூல எண்ணெய் விலை உயர்ந்ததுடன், காப்பீட்டு கட்டணங்கள் மற்றும் கப்பல் கட்டணங்களும் அதிகரித்துள்ளன.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எரிபொருள் விலை சுமார் 5% முதல் 10% வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முறை விலை உயர்வு முந்தையதை விட அதிகமாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த உயர் அதிகாரி ஒருவர், விலை உயர்விற்கு அதிக வாய்ப்பு இருப்பினும், அது நடைமுறைக்கு வரும் திகதி குறித்து இதுவரை உறுதிப்படுத்த முடியாது என கூறியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கை பெற்றோலியக் கழகம் ஆர்டர் செய்த 90,000 மெட்ரிக் டன் எரிபொருள் மற்றும் தனியார் நிறுவனம் ஆர்டர் செய்த 35,000 மெட்ரிக் டன் எரிபொருள் நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் செலவுகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 40,000 மெட்ரிக் டன் எரிபொருளுடன் கூடிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. தற்போதைய செலவின உயர்வை முன்னிட்டு, அந்த எரிபொருளின் விலையையும் உயர்த்த அனுமதி கோரி அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




